கமல்ஹாசன் அரசியல் பற்றி பத்மபிரியா சொன்ன வார்த்தை.. திருமா பிக்பாஸ் விக்ரமன் சர்ச்சை பற்றி ‘பளிச்’!
சென்னை : மநீம தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது குறித்துப் பேசியுள்ள திமுக ஐடி விங் மாநில துணை செயலாளர் பத்மபிரியா, கமல்ஹாசன் தீவிரமாக இயங்கத் தொடங்கியிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் ஓட்டு கேட்டது பற்றிப் பேசியுள்ள பத்மபிரியா, திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. அதை ஏற்பதும், ஏற்காததும் பார்வையாளர்களின் விருப்பம் என பதில் அளித்துள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் வருகையால் இளைஞர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு பெருகி இருப்பது பற்றியும், அண்ணாமலை வருகைக்குப் பிறகு பாஜகவில் நிலவும் குழப்பங்கள் பற்றியும் நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியிருக்கிறார் பத்மபிரியா.
#Exclusive திமுகவில் பாஜக போல வீடியோ, ஹனி ட்ராப் கேம் இல்லை.. அண்ணாமலையின் 'ஜோக்’ : பத்மபிரியா பரபர!
உதயநிதி பொறுப்பேற்ற பிறகு
கேள்வி : திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இளைஞர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. அதேசமயம், பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.. உண்மையில் நிலவரம் என்ன?
பதில் : இளைஞர்கள் அரசியல் ஆர்வத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் பல தலைவர்களின் கனவு, உண்மையில் அது நடந்திருக்கிறது என்றால் மகிழ்ச்சி. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்குப் பொறுப்பேற்ற பிறகு இளைஞர்கள் அதிகமானோர் திமுகவால் ஈர்க்கப்பட்டிருப்பதை நான் நேரிலேயே பார்க்கிறேன். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை, அண்ணாமலை வருகைக்குப் பிறகு கட்சி கலையும் நிலை இருக்கிறதே தவிர ஆதரவு அதிகரித்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே இருக்கும் சீனியர்களையே ஆடியோ வீடியோ காட்டி, 'ஹனி ட்ராப்' வலையில் வீழ்த்து அடித்து விரட்டுவதாகத்தான் தெரிகிறது. பேஸ்மெண்ட்டே ஆடும்போது புதிதாக இளைஞர்கள் எப்படி கட்சிக்குள் வருவார்கள்?
வார் ரூம் அரசியல்
கேள்வி : பாஜகவில் உட்கட்சி மோதல்கள் இப்போதுதான் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக, 'வார் ரூம்' செயல்படுவதால் தான் பிரச்சனைகள் வெளியே வருவதாகச் சொல்கிறார்கள். வார் ரூம் போன்ற அமைப்புகள் திமுகவிலும் இருக்கிறதா?
பதில் : வார் ரூம் வைத்து தனது சொந்தக் கட்சியினரை தாக்குபவர்கள் பாஜகவினராகத்தான் இருப்பார்கள். பாஜகவைப் போல வார் ரூம் வைத்து சொந்தக் கட்சியினரையே தாக்கும் அவலம் வேறு எந்தக் கட்சியிலும் கிடையாது. திமுக ஐடி விங்கை பொறுத்தவரை திமுக அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்ப்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
கமல்ஹாசன் பற்றி பத்மபிரியா
கேள்வி : மநீம தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். கமல்ஹாசனின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : கடைசியில் அவர் தீவிரமாக செயல்படத் தொடங்கி இருக்கிறார். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
கேள்வி : கட்சிப் பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பதால், உங்கள் சமூக செயல்பாடுகள் குறைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில் : நிச்சயமாக இல்லை. இப்போது எனக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பே சமூக செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் என்பதுதான். எனவே நான் செய்துகொண்டிருக்கும் பணிகளை இன்னும் அதிகமாக முன்னெடுத்துச் செய்ய முடியும் என்றுதான் நினைக்கிறேன்.
மாநில சுயாட்சி
கேள்வி : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வென்றால் இந்த விஷயம் நிச்சயமாக நடக்கும் என்கிற வகையில் திமுக எந்த திட்டத்தை தயாராக வைத்துள்ளது?
பதில் : இப்போது இருக்கும் காலகட்டத்தில் 'மாநில சுயாட்சி'க்கான தேவை அதிகரித்துள்ளது. ஒருபுறம் மொழியை ஒடுக்குகிறார்கள், மாநில உரிமைகளை பறிக்க நினைக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இப்போதுதான் கண்ணைத் திறக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் காலங்காலமாக இதற்காக குரல் கொடுத்து வந்திருக்கிறோம். கட்சி என்று இல்லாமல், மாநில சுயாட்சி, மொழி சார்ந்து மக்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்பது எனது கோரிக்கை. இது இன்றைய காலகட்டத்தின் தேவையாக நான் பார்க்கிறேன்.
அதிமுக - பாஜக
கேள்வி : தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி யார் என்ற பூசல் நடந்துகொண்டிருக்கிறது. அதிமுக, கட்சி மோதல் காரணமாக கொஞ்சம் சுணங்கி இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன.. அதிமுக எப்படி செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில் : தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு பாஜக எதிர்த்துக் குரல் கொடுத்திருந்தாலும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றன. ஆனால், அப்போது கூட அதிமுக பாஜக பக்கமே நிற்கிறது. சமீபமாக நடந்த ஆளுநர் உரை பிரச்சனையின்போது கூட அதிமுக, ஆளுநருக்கு ஆதரவாகவே நின்றது. தமிழ்நாட்டிற்கு ஆதரவாக நிற்கவில்லை. அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்துக்கொண்டு அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதமாகவே நடந்துகொண்டது. தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சுயநலப்போக்குடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது. அதை விடுத்து, மக்களுக்கான அரசியலைச் செய்யும்போது, 'எதிர்க்கட்சி' என்ற இடத்தை தக்கவைக்க வாய்ப்புள்ளது.
எதிர்க்கட்சி ஒற்றுமை - திமுக
கேள்வி : கடந்த இரண்டு முறை பாஜக வென்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கருத்துகள் வருகின்றன.. எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள்? அதில் திமுகவின் பங்கு என்ன?
பதில் : திமுக வலிமையாக இருக்கக் காரணம் கட்சியின் வலுவான கொள்கைகளாக இருந்தாலும், மற்ற கட்சிகளோடு உறுதுணையாக இருப்பதால் தான் இன்றைக்கும் மத்தியில் ஆளும் கட்சியாலேயே நுழைய முடியவில்லை. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் இருந்திருந்தால் அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது. தமிழ்நாடு நிறைய விஷயங்களில் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது. அதேபோல, பாஜக எதிர்ப்பு விஷயமும் மற்ற மாநிலங்களுக்குப் பரவினால், மாநிலக் கட்சிகளை உடைத்து பாஜக வரவிடாமல் செய்யலாம்.
பிக்பாஸ் விக்ரமன்
கேள்வி : பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசிகவைச் சேர்ந்த விக்ரமன் பங்கு பெற்றுள்ள நிலையில், அவருக்கு வாக்களிக்குமாறு திருமாவளவன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது விமர்சனங்களைச் சந்தித்துள்ளதே?
பதில் : திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. குறிப்பிட்ட நபர் சார்ந்து அவர் பதிவிட்டது, அவர்கள் இருவருடனான அணுக்கம் சார்ந்தது. அதைக் குறிப்பிட்டு நாம் விமர்சிப்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அவருக்குச் சரி என்பதை அவர் ஆதரித்திருக்கிறார், ஆதரவு கோரியிருக்கிறார். அதை ஏற்பதும், ஏற்காததும் பார்வையாளர்களின் விருப்பம் தான். திருமாவளவன் சொன்னதற்காகவே ஒருவர் வாக்களிப்பப் போவதும் இல்லை, அவரவர் விருப்பப்படிதான் வாக்களிப்பார்கள். இதில் பெரிதாக விமர்சிக்க ஒன்றும் இல்லை.