ஆழ்வார்பேட்டைக்கு வந்தார் கேசிஆர்.. ஸ்டாலினை சந்தித்தார்.. ஆலோசனைக்கு பின் திரும்பி சென்றார்!
இன்று மாலை முக ஸ்டாலினை சந்திக்க உள்ளார் சந்திரசேகரராவ்
Recommended Video
சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் முக ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றதால், தமிழக அரசியல் களம் சூடேறி உள்ளது.
இன்னும் கொஞ்ச நாளில் நாடாளுமன்ற தேர்தல் முடியப் இருப்பதால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை (கொள்கை, கோட்பாடுகள், மக்கள் விருப்பம், மக்கள் தீர்ப்பு ஆகியவற்றை தூக்கி குப்பையில் போட்டு விட்டு) எல்லா கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டன.
தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக, காங்கிரஸ் என இந்த இரண்டு கட்சியுமே இல்லாத ஒரு 3-வது அணியை அமைக்க புது வியூகம் அமைக்க தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்
பினராயி விஜயன்
இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து பேசி வருகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றோருடன் சந்திப்பு என தீவிரம் காட்டி வருகிறார்.
சந்தேகங்கள்
அப்படித்தான் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க முடிவு செய்தார். அதற்காக இன்றைய தினம் அதாவது 13-ம் தேதி சந்தித்து பேச நேரமும் கேட்டிருந்தார். இந்த பேச்சு வந்தபோதே பல்வேறு சந்தேகங்களும், யூகங்களும் எழுந்தன.
சலசலப்புகள்
ராகுல் காந்திதான் பிரதமர் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் முந்திக் கொண்டு சொன்னவர் முக ஸ்டாலின்தான்! அப்படி இருக்கும்போது, சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்டது பெரும் சலசலப்புகளையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் அணி தாவுகிறாரா என்ற பேச்சும் கிளம்பியது.
கூட்டணி
இதன் காரணமாக ஸ்டாலின், கேசிஆரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் அன்று வெளியானது. ஆனால் இருவரும் இன்று மாலை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் ஸ்டாலின் காங்கிரஸ் ஆதரவு என்ற தன் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளாரா? அல்லது இது வெறும் மரியாதைக்குரிய சந்திப்புதானா என்று இதுவரை தெரியவில்லை.
ஆழ்வார்பேட்டை
இந்நிலையில்தான், பிற்பகல் கேசிஆர் சென்னை வந்தார். இதையடுத்து, சரியாக 4 மணிக்கு ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு சென்ற அவரை ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
விவாதம்
கலைஞரின் வெண்கல சிலை ஒன்று, கேசிஆருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, கேசிஆர் உடனான சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் கேசிஆர் விவாதித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, ஸ்டாலின் என்ன பேசினார், சந்திரசேகராவ் 3-வது அணிக்கு ஆதரவு தருவதாக சொன்னாரா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை.
என்ன பேசினார்கள்
பொதுவாக தலைவர்கள் சந்திப்பு நடந்தால், செய்தியாளர்களை சந்தித்து பேசுவதும், அதுதொடர்பான விளக்கம் அளிப்பதும் வழக்கம். ஆனால் மிக முக்கியமான சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தும், கேசிஆர் மற்றும் ஸ்டாலின் இருவருமே செய்தியாளர்களை சந்திக்கவில்லை. கேசிஆர் அப்படியே திரும்பிச் சென்றார். இது யூகங்களை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், ஏற்கனவே தகித்து கொண்டிருக்கும் அரசியல் களத்தில் மேலும் கிலோ கணக்கில் நெய்யை ஊற்றுவது போல அமைந்துள்ளது!