இளைஞர்கள் வாழ்வுடன் விளையாட வேண்டாம்... அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி. நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்கவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இளைஞர்கள் வாழ்வுடன் மத்திய மாநில அரசுகள் விளையாடக் கூடாது என்றும், அது ஆபத்தானது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தாண்டவம்
கோவை மாநகராட்சியில் 549 துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்குப் பொறியாளர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பித்தார்கள்" என்ற செய்தி, தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவிற்கு கோர ரூபம் எடுத்துத் தாண்டவமாடுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

செயற்கை காரணம்
தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் எல்லாம், ஏற்கனவே ஏதாவது ஒரு 'செயற்கைக் காரணத்தைச்' சுட்டிக்காட்டி, ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

கண்டனம்
மத்திய - மாநில அரசுகள் ஐ.டி. ஊழியர்களின் பணிக்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து - அதைத் தடுப்பதற்கு அக்கறை காட்டவும் இல்லை, கவலைப்படவும் இல்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் எதிர்காலம் என்று கருதப்படும் இளைஞர்களின் வாழ்வுடன் மத்திய - மாநில அரசுகள் இது மாதிரியொரு ஈவு இரக்கமற்ற விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது.

கொத்தாக நிக்கம்
ஆகவே, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி. நிறுவனங்களில் இருந்து கொத்துக் கொத்தாக ஊழியர்கள் நீக்கப்படுவதை உடனடியாகத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications