திமுக தலைமைக்கு தலைவலி.. டென்ஷனாக பறந்த போன்.. ‘உயிரே அத்துப்போச்சு.. தீக்குளிப்பேன்’ - பதறிய மா.செ!
சென்னை : திமுக மாவட்ட செயலாளர் தேர்தலால் திமுக தலைமைக்கு தலைவலி அதிகரித்துள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றதால் திமுக தலைமை ஷாக் ஆகிவிட்டதாம்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் செல்லத்துரை மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் தர்ணா செய்தனர். இந்நிலையில், உட்கட்சி தேர்தல் தொடர்பாக சிவில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
திமுக உட்கட்சி தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில், மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக உட்கட்சி தேர்தல்
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரைக்கு ஆதரவாக அம்மாவட்ட திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரத்த தலைமைக் கழகம்
தேர்தல் நடத்தாமலேயே திமுக எம்.பி தனுஷ் குமாரை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி தென்காசி வடக்கு மாவட்டத்தின் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினர். தர்ணாவில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும், இந்த விவகாரம் பற்றவைத்த தீ இன்னும் அடங்கவில்லை.

தென்காசி வடக்கு
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் ,வாசுதேவநல்லூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தென்காசி வடக்கு மாவட்டம். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் செல்லதுரை. இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜபாளையத்தை சேர்ந்த தனுஷ் குமார் எம்.பியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த செல்லத்துரையின் ஆதரவாளர்கள், தென்காசியில் கூட்டம் போட்டு தீர்மானித்து சென்னைக்கு வண்டி ஏறி அறிவாலயத்தில் தர்ணா செய்தனர்.

கோர்ட்டில் வழக்கு
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் குமாரை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிப்பதற்கு, செல்லதுரையின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தென்காசி முதன்மை நீதிமன்றத்தில் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஒரு சிவில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த விஜய அமுதா என்பவர், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக, தென்காசியில் வைத்து நடத்த வேண்டும் என்று சிவில் வழக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பதறிப்போன செல்லதுரை
இந்த தகவல் தலைமையின் கவனத்திற்குச் சென்றதும் கட்சியின் சீனியர்கள் செல்லத்துரையை அழைத்து, பிரச்சனை செய்ய நினைக்கிறீர்களா எனக் கேட்டுள்ளனர். அடுத்தடுத்து போன் வந்ததால் பதறிப்போன செல்லதுரை, நான் எந்த வழக்கும் தொடரவில்லை, நான் சென்னையில் தான் இருக்கிறேன், ஆதரவாளர்கள் கொஞ்சம் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் எங்கள் சைடில் இருந்து எந்த வழக்கும் தொடரவில்லை, எனக்கு எதிராக தலைமையை திருப்ப யாரோ சதி செய்திருக்கிறார்கள் எனப் பதில் கூறியுள்ளார்.

உயிரே அத்துப்போச்சு
இதுதொடர்பாக தனியார் செய்தித் தளத்திடம் பேசிய திமுக மாவட்ட செயலாளர் செல்லத்துரை, "நான் தற்போது சென்னையில் இருக்கிறேன். நான் எந்த வழக்கும் தொடரவில்லை. வழக்கு தொடரப்பட்டதை கேள்விப்பட்டதும் என் உயிரே அத்துப் போச்சு.. எனக்கு எதிராக செயல்படுபவர்கள் தான் இதனை செய்துள்ளார்கள். வழக்கை வாபஸ் பெற வைப்பேன். இல்லையென்றால் தீக்குளிப்பேன். கட்சி தலைமை என் மீது நல்ல எண்ணம் கொண்டிருக்கிறது. இதனை தடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.

திமுகவில் பதற்றம்
சென்னை பெரம்பூர் திமுக நிர்வாகி அமல்ராஜ் தனக்கு மாவட்ட பொருளாளர் பொறுப்பு வழங்கவில்லை என்று அண்ணா அறிவாலயத்தில் தீக்குளிக்க முயற்சித்து அவரை திமுகவினரும் போலீசாரும் காப்பாற்றிய நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் செல்லதுரை தீக்குளிப்பேன் என்று தெரிவித்துள்ளது திமுகவில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications