அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லையே.. ராயப்பேட்டை மருத்துவமனையில் உதயநிதி செய்த வேற லெவல் 'சம்பவம்'
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி, தனது தொகுதியை மாநிலத்திலேயே முன் மாதிரி தொகுதியாகக் கொண்டு வர வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார்.
அவருடன் சேர்ந்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். சீனியர்கக்கு மரியாதையும், அதேநேரம் ஜூனியர்களுக்கும் உரிய வாய்ப்பும் அளிக்கப்பட்டு சரிசமமாகவே இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாகப் பலரும் பாராட்டினர்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி தரப்பில் அன்பில் மகேஷுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட நபர்களில் முக்கியமானவர் உதயநிதி. கட்சியினருடன் செல்பி தொடங்கி எய்ம்ஸ் செங்கல் வரை அவரது பிரசாரம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.
கவலை இல்லை
இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். இருப்பினும், முதல்முறை எம்எல்ஏ என்பதாலோ என்னவோ அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இதனால் அக்கட்சியினர் இளைஞரணி சற்றே சோகத்தில் தான் உள்ளனர். ஆனால், உதயநிதி இதையெல்லாம் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தொடர் கள ஆய்வு
தன்னை சட்டமன்றத்திற்கு அனுப்பிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, மாநிலத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பரபரப்பாக இயங்கி வருகிறார் உதயநிதி.. தொகுதி முழுவதும் தொடர்ந்து நேரடியாகக் கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் அம்மா உணவகத்தில் திடீரென நுழைந்து ஆய்வு செய்தது அனைவரையும் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
மருத்துவமனைகளுக்கு விசிட்
வழக்கமான அரசியல்வாதிகளைப் போல வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என இல்லாமல், சாதாரண இளைஞரைப் போல ஜூனிஸ் பேண்ட், சட்டையிலேயே தொகுதி முழுக்க வலம் வருகிறார். இந்த ஒரு சிறு மாற்றமே, இளைஞர்களை அவர் பக்கம் எளிதாக ஈர்க்கிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், தொகுதியிலுள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு விசிட் அடிப்பதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன், அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்குக் கழிவறை சுத்தமாக இல்லை எனச் சிலர் எம்எல்ஏ உதயநிதியிடம் புகார் அளித்தாகத் தெரிகிறது. உடனே மருத்துவமனை நிர்வாகத்தினை அழைத்த உதயநிதி, நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமாக வைத்திருக்குமாறு வலியுறுத்தினார்.
Recommended Video
டிரெண்டிங்...!
இதுபோல, திடீர் விசிட் அடிக்கும் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பிரச்சினையைச் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தலைவர்களும் செக் செய்ய மாட்டார்கள், அதிகாரிகளும் செக் செய்ய மாட்டார்கள். ஆனால், உதயநிதி இதிலும் சிக்ஸ்ர் அடித்துவிட்டார். ட்விட்டர் முழுவதும் உதயநிதியின் செயல்தான் இப்போது டிரெண்டிங்...!
கழிவறைகளை ஆய்வு
சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் ராயப்பேட்டை மருத்துவமனையை உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். கடந்த முறை கேட்டறிந்த குறைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளதா என்பதை உதயநிதி நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது துளிகூட யோசனையின்றி, மருத்துவமனையிலுள்ள கழிவறைக்கு முறையாகவும் சுகாதாரமாகவும் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். இது அவரது கட்சியினர் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
வேறு மாதிரியான அரசியல்வாதி
உதயநிதியைப் போன்ற தலைவர் மருத்துவமனைகளில் உள்ள கழிவறைக்கு நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தேவையில்லை. மருத்துவமனை நிர்வாகத்தையோ அவரது ஆட்களையோ கொண்டு ஆய்வு செய்ய சொல்லியிருக்கலாம். ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கினால்தான் வேலை வேகமாக நடக்கும் என்பதை உணர்ந்து உதயநிதி செயல்பட்டு வருவதாகவும் இப்போது வேறு எந்த எம்எல்ஏ-வும் உதயநிதி அளவுக்குத் தொகுதியில் ஆக்டிவாக இறங்கி வேலை செய்வது இல்லை என்றும் பாராட்டித் தள்ளி வருகின்றனர் இணைய உடன்பிறப்புகள்..!