அரபிக் கடலில் டவ்-தே புயல்.. மியான்மர் வைத்த பெயர்.. என்ன அர்த்தம்? கரையை கடக்கப்போவது எங்கே?
சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறுகிறது. புயலுக்கு டவ்-தே என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன, புயல் எங்கே கரையை கடக்க கூடும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
லட்சத்தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்ட 3 எம்பிக்கள்.. வைத்திலிங்கம், கேபி முனுசாமியின் ராஜினாமா பின்னணி!
இந்த நிலையில்தான், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே (Tauktae) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
முதல் புயல்
இதுதான் 2021ம் ஆண்டின் இந்தியாவின் முதல் புயலாக இருக்கப்போகிறது. கோவிட் -19 இரண்டாவது அலைகளை எதிர்த்து நாடே போராடும் நேரத்தில் புயல் காரணமாக அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும். பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. லட்சத்தீவு, கேரளா கடற்கரை பகுதிகள், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களின் கடலோர பகுதிகள் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
புயல் கரையை கடப்பது எங்கு?
இந்த புயல் ஓமன் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று சில வானிலையாளர்கள் கூறுகிறார்கள். சிலர் தெற்கு பாகிஸ்தானில் கரையை கடக்கும் என்கிறார்கள். அப்படி கரையை கடந்தால், குஜராத்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது, என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புயல்களுக்கான பொறுப்பாளர் சுனிதா தேவி தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மோசமான வானிலை காரணமாக, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுமாறு கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு கடற்கரைக்குத் திரும்புமாறு இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) அறிவுறுத்தியுள்ளதுடன், கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கைகள்
கேரளாவில் ஒரு சில மாவட்டங்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள், 115.6 மில்லி மீட்டருக்கும் 204.4 மி.மீ க்கும் இடைப்பட்ட அளவு அதிக மழை பெய்ய வாய்ப்பிருந்தால் இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படும். மே 14ம் தேதியான இன்று, கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 64.5 மிமீ மற்றும் 115.5 மிமீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருந்தால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும்.
புயல் பெயர் அர்த்தம்
அரபிக் கடல், வங்கக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள் பெயர் சூட்டுகின்றன. டவ்-தே புயலுக்கு மியான்மர் பெயர் சூட்டியுள்ளது. நேரத்திற்கும், இடத்திற்கும் தக்கவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய பச்சோந்தி என்பது இதன் பொருள் என்கிறார்கள். ஓணானில் ஒரு வகை என்றும் சொல்கிறார்கள்.