3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா?.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்
சென்னை: தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா என்ற கேள்விக்கு டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டை பொருத்தே லாக்டவுன்கள் முடிவு செய்யப்படும் என டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து தமிழ் ஒன் இந்தியாவுக்கு டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் அளித்த சிறப்பு பேட்டி கேள்வி பதில் வடிவில்:
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
கே: சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு என்ன காரணம்
ப: சென்னையில் மட்டுமில்லை. கேரளாவிலும் இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை எடுத்துக் கொண்டோமேயானால் சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது இருக்கும் டெல்டா வேரியண்டின் தொற்றும் தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால்தான் கேஸ்கள் அதிகரிக்கிறது.
கே: கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கும் மூன்றாவது அலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
ப: கட்டாயம் இருக்கிறது. கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் அதன் ஆரம்பகால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது போல் நிதி ஆயோக்கும் வரபோகிற 120 முதல் 125 நாட்கள் மிகவும் சீரியஸான நாட்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் 3ஆவது அலை வரலாம் என்பதையும் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசிடம் இருந்து அறிவிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவதை கவலைக்குரியதாகவே நாம் பார்க்கிறோம்.
கே: முதல் அலையில் பெரியவர்களை பாதித்த கொரோனா , அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 2ஆவது அலை ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது, 3 ஆவது அலையில் எந்தமாதிரியான பாதிப்புகள் இருக்கும்?
ப: முதல் அலையில் வந்த வேரியண்ட் ஆல்பா வேரியண்ட். இரண்டாவது அலையில் டெல்டா வேரியண்ட். இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், ஆல்பாவை விட டெல்டாவிற்கு பரவும் தன்மை, தொற்றும் தன்மை அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில் அதிகபடியான நபர்களுக்கு தொற்று ஏற்படும் போது எல்லாரும் போய் மருத்துவமனைக்கு சென்ற போது நம் மருத்துவ கட்டமைப்பில் போதாமை ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் நிறைய பேருக்கு படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதும் பற்றாக்குறைக்கு காரணம். முதல் அலையைவிட இரண்டாவது அலையில் பலருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது.
முதல் அலையில் 100 பேருக்கு கொரோனா இருந்தால் அதில் 85 சதவீதம் பேருக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது. மீதமிருந்த 15 சதவீதம் பேருக்குத்தான் லேசான அறிகுறிகள் இருந்தன. ஆனால் இரண்டாவது அலையில் 25 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவை, மருத்துவமனையில் அனுமதி ஆகியவை தேவைப்பட்டது. இதனால் நமக்கு ஒரு வித்தியாசமான சூழல் ஏற்பட்டது.
மூன்றாவது அலையில் எப்படியிருக்கும் என்பதற்காக அதுகுறித்த ஆய்வுகள், பாசிட்டிவிட்டி ரேட், கொரோனா வைரஸின் மரபணுவை வளர்த்து பார்க்கும் போது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் இப்போது இந்த டெல்டா வேரியண்ட்தான் இருக்கிறது. அதன் தொற்றும் தன்மை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் மூன்றாவது அலையை சந்திக்க போகிறோம். இந்த நேரத்தில் நம்மிடம் இருக்கும் பிளஸ் என்னவென்றால் தடுப்பூசிகள். முதல் அலையில் இல்லாத ஒன்று, இரண்டாவது அலையில் இருந்தும் நாம் சரியாக பயன்படுத்தாத ஒன்று இந்த தடுப்பூசிகளாகும்.
மூன்றாவது அலையை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும் அதன் தீவிரதத்தன்மையை குறைக்க தடுப்பூசிகள் உதவும். மூன்றாவது அலை வருவதை தள்ளி போட முடியும். ஓரிரு கேஸ்கள் அதிகரித்துவிட்டதால் கடந்த அலை போல உச்சத்திற்கு செல்லும் என இல்லை. இப்போது போல் மெதுவாகவும் கேஸ்கள் அதிகரிக்கும். இது போல் ஒரு மாதம் இருந்தாலும் நல்லதுதான். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் பரவாமல் இருந்தாலும் நல்லதுதான். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது போதுமான அளவு தடுப்பூசியை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தடுப்பூசி என்ற ஒன்று இருப்பதினால் அதன் அருமை நமக்கு தெரியாமல் போயிற்று. டெங்கு காய்ச்சல் இப்போதும் பரவி வருகிறது. ஆனால் இந்த காய்ச்சலுக்கு போதுமான திறன் மிக்க தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது போல் மலேரியா காய்ச்சலுக்கும் இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நல்வாய்ப்பாக கொரோனாவுக்கு வேக்சின் கண்டுபிடித்துள்ளார்கள். விலையும் குறைவாகவே இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் முனைப்பு காட்டவில்லை என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
கே: 3ஆவது அலையின் தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கும்?
ப: 3ஆவது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பிருப்பதாக என உலக சுகாதார நிறுவனம் யூகத்தின் பேரில் கூறியுள்ளது. எந்தவித அறிவுப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. அதே நேரத்தில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட தொடங்கியுள்ளார்கள். இந்தியாவிலும் ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு தடுப்பூசியும் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு தடுப்பூசியும் போடப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கோவாக்சின் போடலாம் என சொல்லியுள்ளார்கள். எனவே குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டால் அவர்களையும் இந்த கொரோனாவிலிருந்து பாதுகாக்க வாய்ப்புள்ளது.
கே: ஏற்கெனவே ஒரு டோஸோ இரு டோஸ்களோ தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்துள்ளதா
ப: ஆம் நிறைய பேருக்கு வந்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை Break through Infection என சொல்வார்கள். ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அது 70 சதவீதம் பேருக்கு பலனளிக்கும் என்றால் மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படும் என்பதை உணர்கிறோம். ஆனால் இது போல் தொற்று வந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதோ, ஆக்ஸிஜன் வைக்கப்படுவதோ இறப்புகளோ நடைபெறுவது மிகவும் குறைந்துள்ளது. ஆனால் இவர்கள் தடுப்பூசி போடாதவர்களுக்கு நோய் தொற்றை பரப்புவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
கே: கொரோனா 3 ஆவது அலையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளதா அரசு கூறுகிறதே, அந்த எந்தளவுக்கு உள்ளது
ப: தற்போது மக்கள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் தடுப்பூசி போட வரிசையில் நிற்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசு தடுப்பூசியை கொடுக்க வேண்டும். தடுப்பூசியில் இருக்கும் சுணக்கத்தையும் போதாமையையும் உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும். மூன்றாவது அலை வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என அரசு சொல்லிவிட்டால் மட்டும் போதாது, தனது கடமையான தடுப்பூசியை அரசு வழங்க வேண்டும். இரண்டாவது அலை முடிந்தவுடன் மருத்துவ கட்டமைப்புளை அரசு கலைத்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் 3ஆவது அலை வரும் என்பதால் அதை மீண்டும் கட்டமைப்பது சரியாக இருக்காது என்பதால் அப்படியே வைத்துள்ளனர். இதைத்தான் அரசு தயார் நிலையில் இருப்பதாக சொல்லியுள்ளது.
கே: தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு ஊரடங்கு அவசியமா?
ப: முழு ஊரடங்கு எப்போது போட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்டன. இந்தியாவில் ஏற்கெனவே கொரோனா வந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆவதால் நம்முடைய அனுபவங்கள், தமிழகத்தின் அனுபவங்கள், மற்ற மாநிலத்தின் அனுபவங்கள் ஆகியவற்றை வைத்து எப்போது லாக்டவுன் போட வேண்டும், எப்படி போட வேண்டும் , என்னென்ன காரணிகளை வைத்து போட வேண்டும் என்பது குறித்த அனுபவங்கள் நமக்கு கிடைத்துவிட்டன. இதில் முக்கியமான காரணம் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் (டிபிஆர்). இந்த டிபிஆர் 5 சதவீதத்தை விட அதிகமாகி 10, 20 சதவீதம் போகிறது என்றால் லாக்டவுன் அவசியமாக தேவைப்படுகிறது. எனவே நாம் அந்த நிலையில் இப்போது இல்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கு இடைப்பட்ட காலத்தை நாம் பொருளாதாரம், கல்வி, கல்விக் கூடங்களில் மாணவர் சேர்க்கை, நிறுத்தி வைக்கப்பட்ட முக்கிய தேர்வுகளை இப்போது நடத்தலாம். கொரோனா கேஸ்கள் அதிகரித்தால் அதை கண்காணித்து பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகளை குறைக்காமல் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் அதிகரிக்கும் போது லாக்டவுன் குறித்து முடிவு எடுக்கலாம்.
கே: 2 தடுப்பூசி போட்டது போக பூஸ்டராக 3வது தவணணையும் போட வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்களா.. இது எப்போது நடைமுறைக்கு வரும் ?
ப: இது அவசியம்தான். தடுப்பூசி போட்டவர்களுக்கும் நோய்த் தொற்று (Break through Infection) ஏற்படுகிறது. இதை தவிர்க்க பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது. இதை இரு விதங்களாக பார்க்கலாம். ஆரம்பக்கட்டத்தில் எமர்ஜென்சி பயன்பாட்டுக்காக போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. அதன்பிறகு புதிய வேரியண்ட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்க மாற்றப்பட்ட மற்றொரு புதிய தடுப்பூசிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை மூன்றாவது டோஸாக பூஸ்டர் டோஸாக போட வேண்டிய அவசியம் ஏற்படும் என்றார் டாக்டர் சாந்தி.