நீட் விலக்கு விவகாரம்.. வலுக்கும் எதிர்ப்பு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் திராவிடர் விடுதலை கழகம்
சென்னை : நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், திராவிடர் விடுதலைக் கழகமும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்காமலும் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 1ஆம் தேதியை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவை ஏற்காத ஆளுநரே திரும்பிப் போ எனக் கூறி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் உமாபதி தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications