இன்று நள்ளிரவு சென்னையில் பிரபாகரன் பிறந்தநாள் விழா .. மாட்டுக்கறி விருந்துடன்- அடுத்த பஞ்சாயத்து!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ந் தேதி அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் இன்று நள்ளிரவு பிரபாகரன் பிறந்த நாள் விழா மாட்டுக்கறி விருந்துடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் தனித் தமிழீழம் நாடு கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தியது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம். 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துடனான யுத்தத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்தது. பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அத்தியாயம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கமா?திருமாவளவன் எம்.பி.யை தகுதி நீக்கம் செய்ய பாஜக கோரிக்கை
பிரபாகரன் பிறந்த நாள்
ஆனாலும் ஆண்டுதோறும் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26-ந் தேதி அவரது ஆதரவாளர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட உலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.
நாம் தமிழர் ரத்த தானம்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக பல்வேறு நகரங்களில் ஏற்கனவே ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சியினர் சட்டசபை தொகுதி வாரியாக இந்த ரத்ததான முகாம்களை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மண்டலம் - மைலாப்பூர் தொகுதியில் குருதிக் கொடை முகாம் தொடங்கிவைத்ததாக பதிவிட்டு படங்களை வெளியிட்டிருந்தார். மேலும் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் கொடுத்தால் அவர்களுக்கு உயிர்நேய மாண்பாளர் பட்டம் என்கிற சான்றிதழும் வழங்கப்படுகிறது.
சென்னையில் இன்று நள்ளிரவு
இந்நிலையில் சென்னையில் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், பிரபாகரன் பிறந்த நாளை இன்று நள்ளிரவு கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு பிரபாரகன் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. திவிக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாட்டுக்கறி விருந்து வழங்கப்படும் எனவும் திவிக அறிவித்திருக்கிறது. விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இந்த நிகழ்ச்சியின் சுவரொட்டியைப் பகிர்ந்து, மேதகுபிரபாகரன் பிறந்த நாள் இன்று இரவு 12 மணிக்கு ராயப்பேட்டையில் இணைவோம் என ட்விட்டரில் எழுதியுள்ளார்.
6 தமிழர் விடுதலை சர்ச்சை
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டதை காங்கிரஸ், பாஜக கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய பாஜக அரசு, நளினி உள்ளிட்ட 6 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் 6 தமிழர் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இது தமிழகத்தில் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.