தடுமாற்றம்! தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அமர சென்ற துரைமுருகன் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் பரபரப்பு
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தொடங்கியபோது அமர சென்ற அமைச்சர் துரைமுருகனை பின்னால் நின்ற அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைக்கப்பட்ட 16 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாடு திறந்துவைத்தார்.
இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் குடும்பத்தினர், அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருணாநிதி கைதான போது! துடிதுடித்த வெங்கையா நாயுடு என்ன செய்தார் தெரியுமா? துரைமுருகன் ருசிகரத் தகவல்
துரைமுருகன் வரவேற்புரை
இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். "ஓமந்தூரார் வளாகத்தில் ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து கட்டியவர் கருணாநிதி. அண்ணாசாலையில் சாதாரணமாக காட்சியளித்த இடத்தில் மகத்தான கட்டிடத்தை எழுப்பியவர் கருணாநிதி. சரியான இடத்தில் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெற்று விட்டது. கருணாநிதி சிலையை வைக்க ஓமந்தூரார் தோட்டத்தை ஸ்டாலின் தேர்வு செய்தபோது அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறாரே என்று நினைத்தேன்." எனப் பேசினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தின்போது தடுமாறிய துரைமுருகன்
முன்னதாக இந்த விழாவில் தொடக்கத்தில் தேசிய கீதமும், அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டபோது மேடையில் அமர்ந்திருந்த இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சில வினாடிகள் இடைவெளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தடுமாறிய துரைமுருகன்
அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரியாமல் இருக்கையில் அமர சென்றார். அப்போது அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த அதிகாரி அவரை தடுத்து நிறுத்தினார். உடனே சுதாரித்து நின்றாலும், தடுமாற்றத்துடனே 2 முறை பின்னால் சென்று நாற்காலியில் கைவைத்தார் துரைமுருகன். அதன் பின்னர் வரவேற்புரையின்போது தனது வழக்கமான கலகலப்பு பேச்சால் அரங்கத்தை அவர் சிரிக்கவும் சிலிர்க்கவும் வைத்தார்.
வெண்கல சிலை
ஓமந்தூரார் தோட்டத்தில் திறக்கப்பட்ட சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறார்கள். 3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டம் அருகே அண்ணா சாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலையும், அதற்கு அருகே அண்ணா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலையும் உள்ள நிலையில் இரண்டு திராவிட இயக்க தலைவர்கள் சிலைகளுக்கு மத்தியில் ரூ.1.17 கோடி மதிப்பில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக வாசகம்
இந்த சிலையில், கருணாநிதியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் "வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீர்வோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி" ஆகிய 5 வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.