அரை மணி நேரம்.. பன்னீர் செல்வத்துடன் ஸ்டாலின்.. அய்யயோ பெரிய சதி.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
சென்னை: அதிமுகவை முடக்க திமுக தலைவர் ஸ்டாலின் சதித்திட்டம் தீட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமானது. ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டசபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி இல்லை என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி உண்டாவிரதம்
சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி கைது
போராட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். சட்டசபை சபாநாயகருக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்,ஏக்களை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

கிடப்பில் போட்ட சபாநாயகர்
எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. எதிர்கட்சி துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை.

நீதி கிடைக்கும் வரை போராடுவோம்
நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறுகிறார் சபாநாயகர் அப்பாவு. கட்சி என்பது வேறு. சட்டமன்றத்தில் கட்சிக்காரர் போல ஸ்டாலின் சொல்வதை கேட்டு சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஓபிஎஸ்ஐ ஏற்க முடியாது
அதிமுகவில் கட்சியை விட்டு நீக்கிய ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்கட்சி துணைத்தலைவராக எப்படி ஏற்றுக்கொள்வது. அவர் திமுக உடன் சேர்ந்து கொண்டு கட்சி அழிக்க முயல்கிறார். அதிமுக அலுவலகத்தில் சூறையாடி கட்சியை கொள்ளையடித்து சென்றவர்கள், திமுக உடன் சேர்ந்து அதிமுக அலுவலகத்தை சீல் வைத்தார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

எண்ணம் பலிக்காது
சட்டசபையில் சபாநாயகர் மூலமாக ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். நேற்றைய தினம் முதல்வர் ஸ்டலினிடம் ஓ.பன்னீர் செல்வம் அரைமணி நேரம் பேசியுள்ளார். அதிமுகவை அழிக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார் அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை சிதைக்க நினைக்கும் ஸ்டாலின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications