மக்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? டெல்லி பயண மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திமுக தலைமையகம் திறப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அது போல் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிதின் கட்கரி ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேச போகிறார். முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
நெருக்கடி! இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நாங்க உதவுவோம்.. அனுமதி தாங்க! பிரதமரிடம் கேட்ட முதல்வர்
முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (இன்பச்) சுற்றுலா மேற்கொண்டார். கடந்த 8 மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில் தமிழக மக்களின் வரிப் பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24 ஆம் தேதி திறந்து வைத்தார்.
பொருட்காட்சி நிறைவு நாள்
பொருட்காட்சியின் நிறைவு நாள் நெருங்கியுள்ளதால் பல அரங்கங்கள் மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் ஷாப்பிங் மால்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று ஆட்சியில் இல்லாதபோது ஆர்ப்பாட்டம் செய்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரானவுடன் தமிழக வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அன்னிய முதலீடு
தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளைக் கொண்டு வரும் வகையிலான அரசு முறைப் பயணம் என்று தம்பட்டம் அடித்தார். அரசு முறைப் பயணம் என்றால் தனி விமானத்தில் குடும்பத்தோடு சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினேன். உடனே உடன் சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு தனியார் விமானச் செலவை திமுக ஏற்றதால் அங்கிருந்தே அறிக்கை விட்டு மழுப்பினார்.
திமுக செலவு
திமுக செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் சென்றது சட்ட விரோதம் என்று மத்திய அரசுக்கு புகார்கள் போயிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் டெல்லி பறந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா? அல்லது முதலீடு செய்ய துபாய் சென்றாரா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஊடகங்களும் நாளிதழ்களும்
இதுகுறித்து ஊடகங்களும் நாளிதழ்களும் வார பத்திரிகைகளும் விவாதங்கள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளன. ஒரு முதல்வரின் வெளிநாட்டுப் பயண நிகழ்ச்சிகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளாமல் மருமகனும் மகனும் செய்தது ஏன் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
10 மாத காலம்
பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது காலில் விழ நேற்று இரவு டெல்லி சென்றிருப்பதாக செய்திகள் வருகின்றன.
43 ஆண்டுகளுக்கு முன்
சுமார் 43 ஆண்டுகளுக்கு முன், தன் தந்தை கருணாநிதி கடைப்பிடித்த வழியை பின்பற்ற ஸ்டாலின முடிவு செய்துள்ளதாக கேலி பேசுகிறார்கள். "பூலான் தேவி, சேலை கட்டிய ஹிட் லர்" என்றெல்லாம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை இழிவுப்படுத்தினார் கருணாநிதி. சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பிக்க 1980 களில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என இந்திரா காந்தி அவர்களின் காலில் விழுந்தார்.
பிரச்சாரத்திற்கு வந்த பிரதமருக்கு கருப்பு பலூன்
அதே போல் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என்ற கருப்பு பலூனை பறக்கவிட்டவர் முதல்வர் ஸ்டாலின். திமுகவினர் மேடை தோறும் பிரதமர் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்தனர் என தன்னுடைய செய்திக்குறிப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.