எடப்பாடி கவலை எல்லாம் இதுதானாம்.. அது மட்டும் நடந்தா.. ‘ஈபிஎஸ் மூவ்’ - போட்டு உடைக்கும் ஆதரவாளர்கள்!
சென்னை : அதிமுக சின்னம் முடக்கப்படும் என்ற பேச்சைப் பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி சட்டையே செய்யவில்லை என்றும், அவரது கவலை எல்லாம் வேறு ஒன்றைப் பற்றித்தான் என்றும் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ஆனாலும், ஈபிஎஸ் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும், நமக்கு பாதிப்பு வராது, தேர்தலில் பலத்தை நிரூபித்து விடலாம் என ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.
அதேநேரம், மற்றொரு விஷயத்தில் பாஜக ஆதரவு இல்லை என்றால் சிக்கல் ஏற்படும் என்ற பயமும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக ஆதரவு
அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக ஆதரவு யாருக்கு என்பது தான் அரசியல் களத்தில் விவாதமாக இருக்கிறது. தற்போது வரும் தகவல்களின்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பாஜகவின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. டெல்லி பாஜக தலைமையுடன் நெருக்கம் கொண்ட முன்னாள் எம்.பி மைத்ரேயன் ஓபிஎஸ் தரப்புக்கு தாவியதற்கு காரணமும் இதுதான் என்கின்றனர். 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக தலைமை தீவிரம் காட்டி வரும் நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுடன் இணைய விரும்பாததை டெல்லி தலைமை ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாஜக திட்டம்
ஓ பன்னீர்செல்வம் இணைப்பு நடவடிக்கைக்கு பச்சை கொடி காட்டி வருவதால், ஓபிஎஸ்ஸை வைத்து காய்களை நகர்த்தி வருகிறது பாஜக. அதன்படி டிடிவி தினகரனும் இந்த கூட்டணியில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையொட்டியே ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக இணைவின் அவசியம் பற்றி பேசியதாகக் கூறப்படுகிறது.

சின்னம்
சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணி உருவாகி பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. ஷிண்டேவுக்கு பாஜகவின் முழு ஆதரவு இருந்தபோதும், அவருக்கே எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை இருந்தபோதும், தேர்தல் ஆணையம், சிவசேனா சின்னத்தை முடக்கி இரு தரப்பினருக்கும் தனித்தனி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னம் ஒதுக்கப்படாதது அரசியல் அரங்கில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உற்று நோக்கிய எடப்பாடி டீம்
பாஜக ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஷிண்டேவுக்கு ஏற்பட்ட நிலைமை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிப்புகளை கூறி வந்தனர். இதை ஈபிஎஸ்ஸும் உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில், சின்னம் தொடர்பான முடிவு ஈபிஎஸ் தரப்பினருக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதேபோல, இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படலாம் என்ற தகவல்களும் ஈபிஎஸ்க்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது ஆதரவாளர்கள் சிலர் சின்னம் முடங்கிவிட்டால் சிக்கலாகிவிடுமே என தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈபிஎஸ் நம்பிக்கை
இதையடுத்து, சின்னம் முடக்கப்பட்டாலும் பிரச்சனை இல்லை என எடப்பாடி அவரது ஆதரவாளர்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், நம்மை சேர்த்தால் தான் அவர்களால் இங்கு ஜெயிக்க முடியும், அதனால் நமக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். சின்னத்தை பற்றி கவலைப்படவே வேண்டாம், இரண்டு பேருக்குமே சின்னம் கொடுக்கப்படாமல் முடக்கப்பட்டாலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையோடு பேசியதாக கூறப்படுகிறது.

டெல்லி சமிக்ஞை
பாஜக தனக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்ற சமிக்ஞைகள் தோன்றிய நிலையில் தான், சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பாஜகவை மறைமுகமாகச் சீண்டும் வகையிலும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருந்தது என்கிறார்கள். நம்முடன் கூட்டணி சேர்ந்தால் தான் இங்கு எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியும். நம்மை விட பலம் குறைவானவர்களை வைத்துக்கொண்டு யாராலும் ஜெயிக்க முடியாது, இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

சின்னம் இல்லாவிட்டாலும்
இப்போதைய நிலவரப்படி, அதிமுக சிக்கல் விவகாரத்தில் பாஜகவின் ஆதரவே இல்லாமல் கூட நம்மால் தனியாகச் செயல்பட்டுவிட முடியும். கட்சி ரீதியில் செல்வாக்கு இருக்கிறது, தேர்தல் கூட்டணிக்கு பாஜக நம்மிடம் வந்துதான் ஆக வேண்டும் என்ற இடத்துக்கு வந்திருக்கிறார் ஈபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு, இரட்டை இலை சின்னம் பற்றிய கவலை இல்லை என்றாலும், பாஜக ஆதரவு கிடைக்காமல், மேற்கொண்டு செயல்படுவது கடினம் என்பதை உணர்ந்துள்ளார்.

பாஜக கண்ணை காட்டினால்
ஒருவேளை பாஜக, தெளிவாக ஓபிஎஸ் பக்கம் கண்ணை காட்டிவிட்டால், தன் பக்கம் இருக்கும் முக்கிய தலைகள், குறிப்பாக, சிலபல வழக்குகளால் லகானை டெல்லியின் கையில் கொடுத்திருக்கும் முன்னாள் அமைச்சர்கள் தன்னை ஆதரிப்பார்களா, அல்லது ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடுவார்களா என்ற சந்தேகமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஈபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான புள்ளிகள் மீதே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம்.

சந்தேகம்
கட்சி சின்னம் விவகாரத்தில் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், ஓபிஎஸ்ஸோடு இணையும் பேச்சுக்கே இடமில்லை என பாஜகவின் விருப்பத்தை இடதுகையால் ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் கண் பார்வை தனக்கு இல்லை எனத் தெரிந்தால், ஆதரவாளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்ப்துதான் ஈபிஎஸ்ஸுக்கு பெரும் குடைச்சலாக எழுந்துள்ளது. இதையொட்டியே, பாஜகவை பார்த்துக்கொள்ளலாம், அவர்களுக்கு வேறு வழி கிடையாது என தனது ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications