ஓபிஎஸ் அங்க போனா அவருக்குத்தான் லாஸ்.. “அகிலேஷ் பாணி கைமேல இருக்கு”.. எடப்பாடி போடும் 'பலே' கணக்கு!
சென்னை : இரட்டை இலை சின்னம் நமக்குத்தான் கிடைக்கும், அகிலேஷ் யாதவ் பாணியில் தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை பெற்று விடலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்பிக்கையோடு இருக்கிறதாம்.
அதிமுகவில் எழுந்துள்ள மோதலைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தை அணுகி, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று அவசர ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்பின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் விவாதித்து, அதற்கு எதிரான நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி உ.பியின் அப்போதைய முதல்வர் அகிலேஷுக்கும், அவரது தந்தையும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்டது. அகிலேஷ் யாதவுக்கும், அவரின் சித்தப்பா சிவபால் யாதவுக்கும் இடையே கடந்த மோதல் ஏற்பட்டது. இதனால், கட்சிக்குள் பெரிய அளவிலான குழப்பம் ஏற்பட்டு, முலாயம் சிங் தலைமையில் ஒரு அணியும், மகன் அகிலேஷ் தலைமையில் ஒரு அணியும் இயங்கியது.

முலாயம் சிங்
செயற்குழுவைக் கூட்டி தனது தந்தை முலாயம் சிங் யாதவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தேசிய தலைவராக தன்னை தேர்வு செய்தார் அகிலேஷ் யாதவ். இதையடுத்து தேசிய செயற்குழு கூட்டியது சட்டவிரோதமானது, இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செல்லாது என்று முலாயம் சிங் யாதவ் அறிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் முலாயம் சிங் நாடினார்.

சைக்கிள் சின்னம்
அந்த ஆவணங்களில் 200 எம்.எல்.ஏ.க்கள், 56 எம்.எல்.சி.க்கள், 15 எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்கள் இடம்பெற்றன. கட்சியில் உள்ள 5,000 பிரதிநிதிகளில் 4,600 பேரின் ஆதரவு கடிதங்களும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகமான எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு அகிலேஷுக்கே இருந்ததால், சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கு ஒதுக்கப்பட்டது.

அதே பாணியில்
அந்த பாணியைத்தான் எடப்பாடி பழனிசாமி கடைபிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் கூட அடுத்த தேர்தல் வருவதற்குள், பொதுக்குழு மற்றும் கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவைக் காட்டி இரட்டை இலை சின்னத்தை தனது பக்கம் மீட்டுவிடலாம் என கணக்குப் போட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

இன்றும் ஆலோசனை
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு வேண்டி டெல்லி வரை சென்றிருப்பதால், தனது தரப்பை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருடனும் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதில், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளனர். ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை நாடி சின்னத்திற்கு பிரச்சனை ஏற்படுத்தினால் என்ன செய்வது என்றும் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கையுடன் எடப்பாடி
இந்த விவாதத்தின்போது, கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும். எம்.எல்.ஏக்களின் ஆதரவும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும் ஓபிஎஸ்ஸை விட பல மடங்கு அதிகமாக நமக்கு இருக்கிறது, அதை வைத்தே சின்னத்தையும், கட்சியையும் கையகப்படுத்திக் கொள்ளலாம் என முக்கிய நிர்வாகிகள் கட்சி விதிகளையும், தேர்தல் ஆணையத்தின் முந்தைய முடிவுகளையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளனர்.

கட்சியில் ஆதரவு
அதிமுகவைப் பொறுத்தவரை 66 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ் தரப்பில் இருப்பதாக எடப்பாடி ஆதரவாளரான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர். எம்.பிகளை பொறுத்தவரை ஓ.பி.ரவீந்திரநாத் குமார், ஆர்.தர்மர் ஆகிய இருவர் ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர். சி.வி.சண்முகம் உட்பட மற்ற 3 எம்.பிக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கின்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
அதேபோல, பொதுக்குழு உறுப்பினர்களும் பெரும்பான்மையானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாகவே உள்ளனர். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் 2,190 பேரின் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார் சி.வி.சண்முகம். அவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். அவர்கள் போக இன்னும் சுமார் 200 பேரும் எடப்பாடி ஆதரவாளர்கள் என்றே தகவல் வருகிறது.

சின்னம் நமக்குத்தான்
எனவே, அகிலேஷ் யாதவ் வழியில் பொதுக்குழு பெரும்பான்மை மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டுவிடலாம் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் கணக்காக இருக்கிறது. அதனால், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அவ்வளவு சீக்கிரம் அணுக மாட்டார். அங்கு செல்ல வேண்டும் என்றால் தனது தரப்பை அவர் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். சின்னமும் போய்விட்டதால் தனது நிலைமை பரிதாபகரமானதாகிவிடும் என அவருக்குத் தெரியும் என எடப்பாடி தரப்பு கெத்தாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications