பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திரா! தமிழக அரசு கும்பகர்ண தூக்கத்தை கைவிட வேண்டும் -அதிமுக
சென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயலும் ஆந்திர அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக அரசு கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விழித்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
'நிரந்தர தலைவர்’ விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்.. என்னாச்சு?
பாலாற்றின் குறுக்கே
தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டப் போவதாக அறிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த கையாலாகாத அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக் கேடானது.
ஒய்.எஸ்.ஆர் ஆட்சி
ஆந்திராவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், பல்வேறு அணை கட்டும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தற்போதைய ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், தான்தோன்றித் தனமாக பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனையை தருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி
தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணி மிகனிபள்ளே என்ற இடத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் அவர்கள் பேசும்போது, தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாக கூறியுள்ளார். இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். குடிப்பள்ளி என்ற இடத்திலும், சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர் தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 250 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் ஆந்திர முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வட தமிழகம்
வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி, ஆந்திராவில் 93 கி.மீ. தூரம் பயணித்து, அம்மாநிலத்தின் குப்பம் மாவட்டத்தில் 33 கி.மீ. பயணிக்கிறது. பின்பு நம் தமிழகத்தின் வாணியம்பாடி அருகே புல்லூரில் தடம் பதிக்கிறது. சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. ஆண்டு தோறும் பாலாற்றில் குறைந்த பட்சம் 80 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது என்று அளவீடுகள் தெரிவிக்கின்றன.
மவுனம் சாதிக்கிறார்கள்
இதில் கர்நாடகா 20 டி.எம்.சி.யும், ஆந்திரா 20 டி.எம்.சி. யும், தமிழகம் 40 டி.எம்.சி. தண்ணீரும் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்பது மூன்று மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தம். ஆனால், தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும், விடியா அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.
கும்பகர்ண தூக்கம்
திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை திசை திருப்பும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும். கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது. இந்த விடியா அரசு நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காண வலியுறுத்துகிறேன்.