தேர்தலுக்கு பின்.. கூட்டணி கட்சிகள் அதிமுகவுடன் பயணிக்க தேவையில்லை.. எடப்பாடி பழனிசாமி பகீர்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தேர்தல் முடிந்து, விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையெனில் அவரவர் கொள்கைப்படி செயல்படலாம் என்றும், திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக கட்சிகள் அடிமையாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் "மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் சென்னை வானகரத்தில் மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக எப்போதும் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கும் கட்சி.

ஆனால் அதிமுக எப்போதும் கூட்டணியுடன் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கும் கட்சி. திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை வானளவுக்கு உயர்ந்துவிட்டது. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யக் கூடிய ஒரே கட்சி திமுக தான். காவல்துறையை தனது கைப்பாவையாக திமுக மாற்றிவிட்டது. இந்த தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.
அதிமுக கூட்டணிக்கு ராஜ்ஜியம் கிடைக்கும். அதிமுக மக்களுக்கான ஆட்சியை செய்தது. திமுக வீட்டில் இருப்பவர்களுக்காக ஆட்சி செய்கிறது. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 ஆயிரம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது என்று சொல்கிறார். 3 மாத மகளிர் உரிமைத் தொகை, கோடைக்கால உதவித்தொகை என்று ரூ.5 ஆயிரம் கொடுத்தார்கள்.
ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடு தான் ரூ.5 ஆயிரம் கொடுத்தது. நீங்கள் ரூ.5 ஆயிரம் கொடுத்தது சூப்பர் ஹிட் இல்லை.. நாங்கள் ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்.. உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தில் மக்களிடம் உங்கள் கனவு என்னவென்று கேட்ட போது, திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் கனவு என்கிறார்கள்.
இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. அந்த கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடையில் நிலைக்கு வந்துள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். அதனை ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார். வரும் தேர்தலுடன் திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்படும்.
அதிமுக ஆட்சி அமைத்த பின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்ததை பொறுக்க முடியாமல் வாயில் வடை சுடுகிறோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஸ்டாலின் தான் வாயில் வடை சுடுகிறார்.. 5 ஆண்டுகளாக வடை சுட்டு மக்களுக்கு திமுக மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் மட்டும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
யாருக்கும் அதிமுக அடிமை இல்லை.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அடிமையாக உள்ளது. பெ.சண்முகம் அடிமைத்தனமாக இருப்பதான் கம்யூனிஸ்ட் கட்சி வளரவில்லை.. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி மட்டும்தான். தேர்தலுக்கு பின் அந்தந்த கட்சிகள் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையென்றால், தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications