உங்க வேலைய மட்டும் பாருங்க! பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் இபிஎஸ் டீம்! அப்போ அதுதான் நடக்கும் போலயே?
சென்னை : டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அதிமுகவில் இணைக்க வேண்டுமென பாஜக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிமுகவில் என்ன நடக்க வேண்டுமென்பதை பாஜக முடிவு செய்யக் கூடாது, அது பாஜகவின் வேலையும் அல்ல என எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசியது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் பாஜக மீதான அதிருப்தியை முன்னாள் சீனியர் அமைச்சர்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறது எடப்பாடி தரப்பு.
தற்போது பத்து நாடாளுமன்ற தொகுதிகள் கேட்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பாஜக தலைமை தனக்கு எதிராக செயல்படுகிறதோ என நினைக்கிறார் எடப்பாடி. இதன் காரணமாகத்தான் செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்கள் பாஜக தரப்பை மறைமுகமாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜக தரப்பு
தற்போது பாஜக தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இல்லாமல், தனித்துப் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என சில சீனியர் மாஜிக்கள் பேசிய நிலையில் தற்போது அதே பாணியை கையில் எடுக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது. இதனால் வரும் காலங்களில் பல சீனியர் மாஜிக்கள் பாஜக விமர்சனம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள் என கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுக்கள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

கண்டனம்
இந்நிலையில் பாஜக குறித்து பேசியுள்ள ஊடகவியலாளரும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சமீபத்தில் இணைந்தவருமான 'அம்மா' கோபி, அதிமுகவின் அணுகுமுறை என்னவாக இருக்கிறது என்பது குறித்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுகவில் யார் இருக்க வேண்டும், யார் இருக்க கூடாது, யாரை இணைக்க வேண்டும் என்பதை அதிமுக தொண்டன் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவில் இருக்கும் எந்த தொண்டனும், பாஜகவின் இந்த பேச்சுகளையோ, முன்முயற்சிகளையோ விரும்பவில்லை" என பேசியிருக்கிறார்.

அதிமுக தொண்டர்கள்
இது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் பேச்சும் இதுவாகவே இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை பாஜக அதிமுக எடப்பாடி அணிக்கு கொடுத்து வரும் நிலையில் எடப்பாடி பாஜக கூட்டணியில் இருந்து விலக நினைக்கிறார். அதன் வெளிப்பாடாகவே மூத்த முன்னாள் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் பாஜகவை மறைமுகமாக பேசி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலும் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகவே செய்யும் என்கின்றனர் விவரம் அறிந்த மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.

என்ன நடக்கும்?
அதே நேரத்தில் பாஜக தலைமை என்ன செய்ய காத்திருக்கிறது என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. எது எப்படி எனினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் அதிமுகவிலும் எது வேண்டுமானாலும் நிகழலாம். இந்நிலையில் கடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து இல்லாததால் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாமல் போனது. சின்னம் முடக்கம் உள்ளிட்ட எது வேண்டுமானாலும் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் 'அவன்' செயல் என்கின்றனர் பாஜக தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications