ஹெல்மெட் அணிந்தும் கருப்பு பட்டை அணிந்தும் எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
சென்னை: எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை தாக்கியுள்ளனர்.
இதை கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டும் பேண்டேஜ் அணிந்தும் பணியாற்றினர்.
இந்த நிலையில் கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர சேவை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி தமிழகத்திலும் இந்த போராட்டம் இன்று தொடங்கியது.
அதன்படி தமிழகத்தில் மருத்துவர்கள் சேவை புறக்கணிப்பு செய்யாமல் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணியாற்றி வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், கருப்பு பட்டை அணிந்து கொண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.