மிகப்பெரிய ஈகோ யுத்தம்.. புள்ளிவிவரத்தை சரமாரியாக அடுக்கிய இபிஎஸ்.. ஆடிப்போன தேமுதிக.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணி நேற்றோடு முடிவிற்கு வந்துவிட்டது.. இந்த கூட்டணி நேற்றுதான் உடைந்தது என்றாலும் கூட கடந்த சில நாட்களாக கூட்டணிக்குள் ஈகோ யுத்தம் ஒன்று நடந்து வந்ததுதான் முறிவிற்கு காரணம் என்கிறார்கள்!
சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அதிமுக கூட்டணியில் விலகுவதாக தேமுதிக அறிவித்து உள்ளது. நாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை, இதனால் கூட்டணியில் இருக்க விருப்பமும் இல்லை.
யாரிடமும் கையேந்தும் நிலை எங்களுக்கு இல்லை. எங்களுக்கு கொடுத்துதான் பழக்கம், வாங்கி பழக்கம் இல்லை என்று கூறி தேமுதிக,அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது.
போக்கிடம் தெரியாமல்.. திமுகவுக்குத் தூது விட்ட தேமுதிக..
விலகல்
தேமுதிகவுடன் 13 தொகுதிகளை பங்கிட்டு கொள்ள அதிமுக தயாராக இருந்தது. ஆனால் தேமுதிக 25 தொகுதிகளை கேட்டது. அதோடு ஒரு ராஜ்ய சபா சீட்டையும் கேட்டது. ஆனால் அதிமுகவோ.. இவ்வளவு எல்லாம் கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது. 3 கட்ட பேச்சுவார்த்தை சொதப்பிய நிலையில் நேற்று கூட்டணி முறிந்தது .
தேமுதிக
இந்த விலகல் குறித்த தேமுதிக நிர்வாகிகள் பலர் குமுறி வருகிறார்கள். நாங்களும் அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான். ஆனால் எங்களுக்கான மதிப்பு கிடைக்கவில்லை. பாமகவிற்கு முதல் ஆளாக இடம் ஒதுக்கினார்கள். தமிழகத்தில் பாஜகவை விட எங்களுக்கு செல்வாக்கு அதிகம் ஆனால் எங்களை மட்டும் கடைசி வரை காத்திருப்பிலேயே வைத்து இருந்தனர்.
காத்திருப்பு
இதனால்தான் நாங்கள் கூட்டணியை விட்டே வெளியேற நேர்ந்துவிட்டது. நாங்கள் யாரிடமும் இடங்களை கேட்டு நிற்க வேண்டிய அவசியம் இல்லை, என்று தேமுதிக தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் தேமுதிகவின் இந்த திடீர் விலகல் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகளோ இதற்கு எதிர்மாறாக பேசுகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பல கட்டமாக நடக்கும்.
ஏமாற்றமும்
திமுகவில் கூட காங்கிரஸ் ஏமாற்றம்தான் அடைந்தது. காங்கிரஸ் பாரம்பரியமான கட்சி. ஆனால் அவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறார்கள். அனுசரித்து போவதுதான் கூட்டணி. அந்த அனுசரிப்பு தேமுதிகவிடம் இல்லை. கூட்டணியை விட்டு விலக தேமுதிக முன்கூட்டியே முடிவெடுத்து விட்டது என்பதுதான் உண்மை. அதை மனதில் வைத்துதான் தேமுதிக செயல்பட்டது.
பேசவில்லை
நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதே எங்களிடம் அவர்கள் பேசவில்லை. நாங்கள் இல்லையென்றால் அதிமுகவே இல்லை என்ற ரீதியில் தேமுதிக செயல்பட்டது. அவர்கள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டு திட்டமிட்டு செயல்பட்டு உள்ளனர். பாமகவை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.. அதை நடக்கவில்லை என்றதும் வெளியேறி விட்டார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகிறது.
ஈகோ யுத்தம்
பாமக - தேமுதிக இடையே நிலவிய ஈகோ யுத்தம்தான் தேமுதிகவின் இந்த விலகலுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பாமகவிற்கு அவ்வளவு இடம் கொடுக்கிறீர்கள், எங்களுக்கும் கொடுங்கள், நாங்களும் அவர்களுக்கு இணையான வலிமையான கட்சிதான் என்று தேமுதிக தொடர்ந்து கேட்டு வந்தது. இதுவே கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய காரணமாக மாறியுள்ளது.
ஒப்பீடு
இது தொடர்பாக அதிமுக தரப்பு தேமுதிகவிடம் டேட்டாக்களோடு பேசி உள்ளது. பாமகவின் வாக்கு வங்கி, தேமுதிகவின் வாக்கு வங்கியை அதிமுக ஒப்பிட்டுள்ளது. 2006, 2011, 2016 சட்டசபை தேர்தலில் வரிசையாக பாமக 5.2%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் தேமுதிக 2006ல் 8.38% எடுத்துவிட்டு அதன்பின் 2011, 2016ல் 7.88%, 2.39% என்று வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது
வாக்கு வங்கி
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாமக 5.49 % வாக்குகள் பெற்றது. ஆனால் தேமுதிக வெறும் 2.22% வாக்குகள் மட்டுமே பெற்றது . இதை சுட்டிக்காட்டி..உங்களின் வாக்கு வங்கி குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாக்கு வங்கிக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும், அதுதான் ஃசேப் என்று அதிமுக உறுதியாக கூறியுள்ளது.
விரும்பவில்லை
ஆனால் தேமுதிக இந்த ஒப்பீட்டை விரும்பவில்லை என்கிறார்கள். பாமகவுக்கு இணையாக இடம் கொடுக்க வேண்டும் என்று கடைசிவரை ஒற்றை காலில் இருந்துள்ளது. ஆனால் இதை அதிமுக ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறிய நிலையில்தான் மொத்தமாக கூட்டணி முறிந்துள்ளது. இதுதான் அதிமுக தலைவர்களை தேமுதிக தலைவர்கள் தற்போது கடுமையாக தாக்கி பேசுவதற்கும் காரணம் என்கிறார்கள்!