206-வது முறையாக தேர்தலில் போட்டி...! அசராத தேர்தல் மன்னன் பத்மராஜன்
சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் மன்னன் பத்மராஜன் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வீரக்காவல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மராஜன், வாஜ்பாய், மன்மோகன் சிங், ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி என பல தலைவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர். குடியரசுத்தலைவர் தேர்தலில் அப்துல்கலாம், பிரனாப்முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிட்டவர்.

தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது அளிக்கப்படும் டெபாசிட் தொகைக்காக மட்டும் தனது சொந்தப்பணம் ரூ.32 லட்சத்தை செலவழித்துள்ளார். அதற்காக இவர் பெரிய செல்வந்தர் என்றெல்லாம் எண்ண வேண்டாம், நடுத்தர வாசிதான். இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அவர் அதற்கான வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியான நடேசனிடம் நேற்று வழங்கினார்.
206-வது முறையாக நாங்குநேரியில் போட்டியிடுவதாக கூறும் அவர், தனது நோக்கம் வெற்றிபெறுவது அல்ல என்றும், கின்னஸில் இடம்பிடிப்பதே தமது லட்சியம் எனவும் தெரிவிக்கிறார். ஏற்கனவே லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டதாக கூறும் அவர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக்கொள்வேன் எனக் கூறுகிறார்.
இந்தியாவிலேயே அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சாதனைக்கு சொந்தக்காரர் இந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்.












Click it and Unblock the Notifications