காவல்துறை பாதுகாப்பு தரவில்லை.. அதிமுக அலுவலக சீல் விவகாரத்தில் எடப்பாடி தரப்பில் அனல் பறந்த வாதம்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி செய்யப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதோடு, சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். அவர், பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தும் அங்கு வராமல் 300க்கும் மேற்பட்டவர்களை கூட்டிக்கொண்டு ஒபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் பிரச்சினை ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து அனைத்து கோப்புகளையும் எடுத்து சென்று விட்டனர்.
தொலைக்காட்சிகளில் வந்த நேரலைகளை பார்த்தாலே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியது தெரியும். கல், கம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கினர். அங்கு போலீஸ் அதிகளவில் இருந்தாலும் அவர்கள் எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை. கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளரே தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர். எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சீல் வைத்ததற்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று வாதித்தார்.












Click it and Unblock the Notifications