ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கமல்ஹாசன் பிரசாரம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், கார்கே, கமல்ஹாசன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூட்டாக ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரது மகன் திருமகன் ஈவெரா, திடீரென காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன் நம்பிக்கை
ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஆனால் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. உச்சநிதிமன்றத்தின் உத்தரவை அடுத்தே அதிமுக சார்பான முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.
டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அவரது வெற்றிக்கு நாங்கள் உதவிகளை செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. திமுகவின் 11 அமைச்சர்களை உள்ளடக்கிய பெரும் படையே களமிறங்கி உள்ளது. அதிமுகவின் இரு கோஷ்டிகளுமே 116 பேர் கொண்ட குழு, 118 பேர் கொண்ட தேர்தல் குழுவை களமிறக்கி உள்ளன.
இத்தேர்தலில் பாஜக இதுவரை தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பலத்தை நிரூபிக்க தேவை இல்லை என்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அதேநேரத்தில் அதிமுகவின் எந்த கோஷ்டியை ஆதரிப்பது என்கிற அறிவிப்பையும் பாஜக வெளியிடவில்லை. ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் சிறு கட்சிகள், பாஜக போட்டியிட்டால் ஆதரவு என்கின்றன.
இத்தகைய எதிர்க்கட்சிகளின் குழப்பங்களுக்கு மத்தியில் திமுக கூட்டணி பிரசாரத்தின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதேபோல மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் பிப்ரவரி 2-வது வாரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.