ஆஹா.. ஈரோடு போயி திண்டுக்கல் வர வச்சுட்டாங்களே.. தொகுதிக்காக அலை பாயும் ஈவிகேஎஸ்!
சென்னை: ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் வேறு தொகுதி தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோட்டில் போட்டியிடலாம் என்றிருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் திமுக அணியில் யாருக்கு எந்தெந்த இடங்கள் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடதாகவே கூறப்படுகிறது.
இவர்கள்தான் மெயின் பிளேயர்ஸ்.. 4 பேருக்கு இடையில்தான் போட்டி.. தமிழகத்தின் அரசியல் சதுரங்கம்!
சத்யா - கணேசமூர்த்தி
திமுக அணியில் மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த இடம் காஞ்சிபுரம் என்றும் அந்த இடத்தில் மல்லை சத்யா போட்டியிடுவார் என்றும் மதிமுக வட்டாரங்கள் கூறிவந்தன. இதனால் காஞ்சிபுரம் தொகுதியை கேட்டு வந்த காங்கிரஸ் பின்வாங்கியது. ஆனால் மதிமுகவில் கணேசமூர்த்தி போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. கணேசமூர்த்தியையே நிறுத்தலாம் என்பது வைகோவின் எண்ணமும் கூட. ஆகவே அவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
அதிர்ச்சியில் இளங்கோவன்
ஈரோடு தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் கேட்டு வந்தது. ஈ.வி.கே,எஸ் இளங்கோவன் தனக்கு ஈரோடு தொகுதியை கேட்டு வருகிறார். அதற்காக அந்த தொகுதியில் அவர் ஏற்கனவே பல பணிகளையும் செய்து வருகிறார். தொடர்ச்சியாக நிர்வாகிகளை சந்தித்து வந்த அவர் பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தார்.
கோவைக்குப் போய்ரலாமா
இந்நிலையில் ஈரோடு மதிமுகவுக்கு செல்வதால் இளங்கோவன் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான கோவை தொகுதியில் போட்டியிடலாமா என்று யோசித்து வந்துள்ளார். கோவையின் சாதக பாதகங்களை ஆலோசித்து வந்தவர் பாஜகவை எதிர்த்து கோவையில் போட்டியிடுவது சரியாக இருக்கும் என்றே கருதியுள்ளார். ஆனால் அந்த இடமும் கூட்டணி கட்சிகளுக்கு செல்கிறது என்ற தகவல் இளங்கோவனுக்கு கிடைத்துள்ளது.
தொகுதியே இல்லை
திமுக அணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் மதுரை தொகுதியும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஈரோடு, கோவை ஆகிய தொகுதிகள் கைநழுவி போனதால் வேறு வழியின்றி திண்டுக்கல் தொகுதி தனக்கு ஏதுவாக இருக்குமா என்று ஆலோசித்து வருகிறார் இளங்கோவன்.
திண்டுக்கல்லுக்கு குறி
திண்டுக் "கல்" வேறு எந்த தடங்"கல்" இன்றி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கிடைக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் வேண்டுகிறார்களாம். ஆனால் அங்கும் ஏதாவது ஒரு முட்டுக்கல் வரக் கூடும் என்று திமுக வட்டாரப் பட்சிகள் கூறுகின்றன. மொத்தத்தில் தொகுதிக்காக அலை பாயும் நிலையில் உள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர்.