Exclusive: இந்திய அரசிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான்.. உக்ரைனிலிருந்து சென்னை மாணவர்
சென்னை: இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அளவுக்கு டென்ஷன் இல்லை என உக்ரைனிலிருந்து சென்னை மாணவர் களநிலவரத்தை விளக்கியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து உக்ரைனில் உள்ள சென்னை மாணவர் கிரிதர் சொலாசா (Giridhar Solasa) ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி, கேள்வி பதில் வடிவத்தில்:
கே: உக்ரைனில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், உங்களை பற்றி கூறுங்கள்
ப: நான் உக்ரைனில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். வினிட்சா நேஷனல் மெடிக்கல் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறேன் (vinnitsa national medical university). நான் இருப்பதும் வினிட்சியாவில் இருக்கிறேன். என்னுடைய சொந்த ஊர் சென்னை மயிலாப்பூர்.
கே: உக்ரைன் எல்லையில் என்ன நடக்கிறது? போர் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?
ப: ஒரு 2, 3 நாட்களாக போர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எங்களுடைய பெற்றோரும் எங்களுடன் இருக்கிறார்கள். உக்ரைன் அரசும் போர் வரக் கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இரு தரப்பில் இருந்தும் பதற்றம் இருக்கிறது.

ரஷ்ய படைகள்
கே: ரஷ்யா கூறியபடி படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளனவா?
ப: உக்ரைன் நாட்டு அதிபர், உளவுத் துறை அதிகாரிகள் சொல்வது என்னவெனில் எல்லையில் ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்படவில்லை. அங்கேயே இருப்பதாகதான் சொல்கிறார்கள். யாரும் பயப்படக் கூடாது என்பதற்காக எல்லையில் நடப்பது குறித்து உக்ரைன் அரசு முழுவதுமாக சொல்லவில்லை. எனினும் எல்லையில் அணு ஆயுத போர் பயிற்சி நடத்தப்பட்டு வருவதாகத்தான் சொல்கிறார்கள். சிறிய எண்ணிக்கையில் படைகள் வாபஸ் பெறப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படியாக தெரியவில்லை.
கே: உக்ரைனில் இந்தியாவை சேர்ந்த எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அது போல் பணி நிமித்தமாக எத்தனை பேர் இருக்கிறார்கள்?
ப: உக்ரைனில் மாணவர்கள் மட்டுமே தோராயமாக 25 ஆயிரம் பேர் இருப்பாரகள். வேலைவாய்ப்பு, அசைன்மென்ட், இன்டர்ன்ஷிப் ஆகியவைக்காக உக்ரைன் வந்தவர்கள் ஒரு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை இருப்பார்கள். அதிகபட்சமாக உக்ரைனில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரை இருப்பார்கள்.

போர் பதற்றம்
கே: உக்ரைன் போர் பதற்றம் தொடர்பாக அந்த நாட்டு அரசு கூறுவது என்ன?
ப: இந்த நாட்டு அரசு யாரும் பயப்பட வேண்டாம் என்கிறார்கள். அவர்களுடைய செய்திக் குறிப்பிலும் அதைத்தான் கூறுகிறார்கள். "நீங்கள் பயந்தால் தாக்குதல் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பயப்படாமல் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தால் பொருளாதார ரீதியில் நமக்கு பாதிப்பு ஏதும் இருக்காது. கொரோனாவும் இருக்கிறது. இந்த போர் பதற்றமும் இருப்பதால் அமைதியாக இருங்கள்" என உக்ரைன் அரசு சொல்கிறது.
கே: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்
ப: மருத்துவ மாணவர் என்ற அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் கொரோனா தாக்கம் இருப்பதால் எங்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் இருக்கின்றன. எனவே நாங்கள் வகுப்புகளில் கவனம் செலுத்துவதா இல்லை போர் பதற்றம் குறித்து கவனம் செலுத்துவதா என தெரியவில்லை. வீட்டில் இருக்கும் பெற்றோரையும் நாங்கள் அமைதிப்படுத்த வேண்டும். நண்பர்களும் இன்று போர் வருகிறது, இன்று குண்டுவீச போகிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இதையும் நாங்கள் பயப்படாமல் சமாளிக்க வேண்டும். உறவினர்களும் எங்களை பற்றி கவலைப்படுகிறார்கள். இத்தனை பேர் எங்கள் மீது அக்கறை செலுத்துகிறார்கள் என நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. படிப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்தோம்.

எந்தெந்த பகுதிகளில் பதற்றம்
கே: ரஷ்யா படைகளை குவித்து வருவதால் எந்தெந்த பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது?
ப: நாங்கள் இருக்கும் வினிட்சியா மத்திய மேற்கு பகுதி. அதாவது ஐரோப்பாவுக்கு அருகில் இருக்கிறது. முக்கியமாக கிழக்கு பகுதிகள், ரஷ்யாவுக்கு வடக்கு பகுதிகள், தெற்கு பகுதிகள் பதற்றத்தில் உள்ளன. மேலும் தலைநகர் கிவ், ஒடேசா (Odesa), கார்கிவ் (Kharkiv) ஆகிய பகுதிகளில் கொஞ்சம் பதற்றம் நிலவுகிறது. டன்னிஸ்கிளஸ்ஸில் இந்தியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.
கே: எந்த நேரத்தில் ரஷ்யா போர் புரியலாம் என்ற நிலையில் அதற்காக உக்ரைன் அரசும் தயார் நிலையில் இருக்கிறதா?
ப: உக்ரைன் அரசு தயாராகவே இருக்கிறது. உக்ரைன் மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருக்கிறது. அதனால் உக்ரைன் தாக்குதலுக்குள்ளாதாகபடி பாதுகாப்பாக இருக்கிறது. உக்ரைன் அரசுக்கு எல்லையில் நடப்பது குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன. அவர்களால் ஒரு சோர்சை மட்டும் நம்ப முடியவில்லை. நம்பத்தகுந்த தகவல் கிடைத்தால் நிச்சயம் எங்கள் முயற்சிகளை அதிகரிப்போம் என்கிறார்கள். எனினும் போர் தொடுத்தால் அதை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறார்கள்.

இந்திய தூதரகம்
கே: இந்தியர்கள் எம்பசியை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்களே, நீங்கள் தொடர்பு கொண்டீர்களா, உங்களுக்கு தூதரகம் உதவுகிறதா
ப: 2 வாரங்களுக்கு முன்பே இந்திய தூதரகத்தில் இருந்து ஒரு விண்ணப்பத்தை தூதரகம் அனுப்பியிருந்தது. அது மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. நாங்கள் இருக்கும் பகுதி, எந்த கல்லூரியில் படிக்கிறோம், எந்த ஆண்டு படித்து வருகிறோம் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்தோம். அவசரம் என்றால் யாரை அழைப்பது போன்ற கேள்விகள் அதில் இருந்தன. இந்திய அரசு அறிக்கைக்காக நாங்கள் காத்திருந்தோம். இது இந்திய அரசின் நல்ல முயற்சி. இது எங்களை பாதுகாப்பாக உணர வைக்கிறது.
கே: உக்ரைனில் உள்ள இந்தியர்களை இந்திய அரசு அழைத்து வரும் அளவுக்கு பதற்றம் இருக்கிறதா
ப: தாயகம் அழைத்து செல்லும் அளவுக்கு பதற்றம் இல்லை. ஏற்கெனவே இந்தியர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்தார்கள். இதுதான் எளிதாக இந்தியர்களை மீட்க உதவும் என்பதால்! எங்களுடன் படிக்கும் ஜூனியர் மாணவர்கள் 2, 3 நாட்களாக உக்ரைனை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்தியர்களின் மனநிலை
கே: போர் பதற்றத்தின் இடையே இந்தியர்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது
ப: உக்ரைன் நண்பர்களும் அவர்களது குடும்பத்தினரும் எங்கள் மீது அக்கறை செலுத்துகிறார்கள். எங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் ஜூனியர்களுக்கு எதுவும் ஆக கூடாது என்பதை பார்த்துக் கொள்கிறோம். உலக நிகழ்வில் நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பக்கம் மன உளைச்சலும் இருக்கிறது.
கே: மத்திய அரசிடம் இருந்து எந்த மாதிரியான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?
ப: எங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். எங்கள் பாதுகாப்பு குறித்து கவலை இருக்கிறது. உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என தூதரகமோ மத்திய அரசு அதிகாரிகளோ தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஊடகங்களும் எதையும் மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி சொன்னால் போதும். சில போலியான தகவல்களை சில ஊடகங்கள் தெரிவிப்பதால் பெற்றோர் கவலைப்படுகிறார்கள். இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்கிறார்கள். இவ்வாறு உக்ரைனிலிருந்து சென்னை மாணவர் கிரிதர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications