Exclusive: தகித்த விஜயபாஸ்கர்.. கோபப்பட்ட சண்முகம்.. மோதிய தலைகள்- அதிமுகவில் நெருங்கும் கிளைமேக்ஸ்?
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக விரைவில் அக்கட்சியில் பெரிய கிளைமேக்ஸ் ஒன்று வரப்போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் டாப் தலைகள் சிலர் இதனால் வரப்போகும் நாட்களில் கசப்பான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் நியூஸ். இதுவரை அரசல், புரசலாக இங்கும் அங்கும் இருந்த அதிமுக மோதல் நேற்று அதிமுக கூட்டத்தில் மிக தீவிரமாக நடந்ததாக கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்த கூட்டமும் அனல் பறந்தது, கிட்டத்தட்ட பெரிய கைகலப்பே ஏற்பட்டுவிட்டது என்று நிர்வாகிகள் பலர் தெரிவித்துள்ளனர். அப்படி இந்த கூட்டத்தில் என்னதான் நடந்தது? இனி என்ன நடக்கிறது போகிறது என்று பார்க்கலாம்.

அதிமுக கூட்டம்
அதிமுக உட்கட்சி விவகாரங்கள், நகராட்சி, மாநகராட்சி தேர்தல், சசிகலா பிரச்சனை, சில நிர்வாகிகள் கொடுத்த புகார்கள் ஆகியவற்றை பற்றி ஆலோசிக்கவே இந்த கூட்டம் நடந்து இருக்கிறதாம். தொடக்கத்தில் பல்வேறு விஷயங்களை பேசி, கூட்டம் சரியான பாதையில்தான் சென்று இருக்கிறது. ஆனால் போக போக கூட்டத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. அதிலும் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்த வாக்குவாதங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

என்ன
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி குறித்து எம்பி அன்வார் ராஜா பேசிய சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தேர்தலில் வென்று இருந்தால் தன்னை எம்ஜிஆர் என்று கூறி இருப்பார். அவர் வலுவான தலைவராக இல்லை என்று அன்வர் ராஜா பேசியதாக கூறப்படும் ஒரு போன் கால் ஆடியோ குறித்து இந்த மீட்டிங்கில் ஆலோசனை செய்துள்ளனர். இதற்கு அன்வர் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது.

அன்வர் ராஜா
அதோடு சசிகலா குறித்து இந்த கூட்டத்தில் அன்வர் ராஜா பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கோபம் அடைந்த சீவி சண்முகம் அவரை அடிக்க பாய்ந்ததாகவும் நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அன்வர் ராஜா கூறிய சில கருத்துக்களை ஏற்காமல் சிவி சண்முகம் இப்படி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர் எதிர்ப்புகள் காரணமாக அன்வர் ராஜா தனது கருத்துக்கு அந்த கூட்டத்திலேயே வருத்தம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு மோதல்
இது ஒரு பக்கம் இருக்க இன்னும் சில தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சனம் செய்துள்ளனர். அவர் கொண்டு வந்த வன்னியர் இடஒதுக்கீடுதான் தோல்விக்கே காரணம். அவசரப்பட்டு முடிவு செய்துவிட்டார். அவரின் தலைமை வலுவாக இல்லை என்று கூட்டத்தில் கூறி உள்ளனர். இதற்கும் கோபம் அடைந்த சிவி சண்முகம் தனது இருக்கையில் இருந்து எழுந்து சிலரிடம் காட்டமாக சத்தம் போட்டதாக தகவல்கள் வருகின்றன.

கட்சி மோதல்
வன்னியர்கள் எல்லோரும் அதிமுகவை ஆதரித்தனர். ஆனால் தென் மண்டலத்தில்தான் சறுக்கிவிட்டோம். தென் மண்டலத்தில் உங்கள் ஆட்கள்தான் வாக்கு செலுத்தவில்லை என்று ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை பார்த்து சிவி சண்முகம் கோபமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சி. விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். இப்படி பேச கூடாது. எடப்பாடி தலைமை சரியல்லை.

தலைமை
அவரின் தலைமை சரியாக இருந்திருந்தால் ஏன் இவ்வளவு பேர் கட்சி மாறுகிறார்கள். பலர் பாஜகவிற்கு செல்கிறார்களே? தலைமை இதை தடுக்கவில்லையே என்று விஜயபாஸ்கர், செங்கோட்டையன் கோபமாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. பின்னர் தலைவர்கள் அசுவாசம் அடைந்த பின் செங்கோட்டையனை அவைத்தலைவராக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

அவசர கூட்டம்
இதையடுத்தே , அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரச்சனைகளை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரும் விதமாக செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள். அதே சமயம் நேற்று கூட்டத்தில் நடந்த இந்த மோதல் காரணமாக அதிமுகவின் டாப் தலைகள் பலர் கட்சி மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.கசப்பான முடிவுகளை வரும் நாட்களில் இவர்கள் எடுக்க போகிறார்களாம்.

கிளைமேக்ஸ்
கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. பலருக்கு மரியாதை இல்லை. பாஜக இப்போதே பெரிய பதவிகளோடு காத்து இருக்கிறது. திமுகவில் சேர்ந்தாலும் கேஸ்ஸில் இருந்து தப்பிக்கலாம். நல்ல வரவேற்பு இருக்கும் என்று மூத்த தலைகள் இப்போதே கட்சி மாற ரெடியாகிக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் அதிமுகவில் பெரிய கிளைமேக்ஸை எதிர்பார்க்கலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications