இ பாஸ் வாங்குவது ரொம்ப ஈஸி.. வேறு நாடு, வேறு மாநிலத்திலிருந்து தமிழகம் வரனுமா.. ஜஸ்ட் இதை செய்யுங்க!
சென்னை: இ பாஸ் நடைமுறை (Tamil Nadu E pass) தமிழகத்தில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் அதிகரித்ததையொட்டி, தமிழக அரசு நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ பாஸ் முறையில், பதிவு செய்திருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனை.
பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த இ பாஸ் நடைமுறையில் பல மாதங்களாக தளர்வு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் அதிகரித்ததன் காரணமாக மீண்டும் இந்த நடைமுறையை கையில் எடுத்துள்ளது தமிழக அரசு.
அதேநேரம் தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ பாஸ் தேவை கிடையாது என்பது சற்று மகிழ்ச்சியான தகவல்.
சுற்றுலாத் தலங்கள்
தமிழ்நாட்டிற்குள், நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பாங்கான பகுதிகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் பயணிக்கும் மக்கள் இ பாஸ் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். எனவே, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்து தமிழகம் வருவோர், தமிழகத்திற்குள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் ஆகியோர், எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்ப ஆரம்பிக்கின்றனர்.
இ பாஸ் வெப்சைட்
கடந்த வருடம் எந்த மாதிரி நடைமுறை இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் பாஸ் எடுக்கும் நடைமுறை இருக்கிறது. இதற்காக https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளம் தமிழக அரசால் பராமரிக்கப்படுகிறது. இங்கு உங்களது தொலைபேசி எண் பதிவு செய்து வேண்டும். உங்களது தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி நம்பர் வரும். இந்த ஓடிபி நம்பரை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
பல ஆப்ஷன்கள்
உள்ளே நுழைந்ததும் தனிநபர் அல்லது குழுவாக சாலை வழிப்பயணம் செய்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். அதில், நீங்கள், கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக சாலை வழியாக தமிழகத்திற்குள் வருவதாக இருந்தால், அதை கிளிக் செய்ய வேண்டும். ஒருவேளை, ரயில் அல்லது விமானம் போன்றவற்றின் மூலமாக வருவதாக இருந்தால் அதற்கு தனியாக கிளிக் செய்வதற்கு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இ பாஸ் பெற வேண்டும் அல்லவா, அதற்கு தனியாக ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் எந்த ஆப்ஷனை கிளிக் செய்கிறீர்களோ அங்கு மற்றொரு பக்கம் விரிவடையும்.
சாலை வழி
சாலை வழியாக தமிழகத்திற்குள் வருகிறேன் என்ற ஆப்ஷன் கிளிக் செய்யப்பட்டால் அதற்கு என்ன காரணம் என்ற கேள்வி முதலில் வருகிறது. திருமணம், மருத்துவ அவசரம், இறப்பு அரசு டெண்டர் விவகாரம், அரசுப் பணிகளை மேற்பார்வை செய்தல், சொத்து பதிவு உள்ளிட்ட பணி நிமித்தமாக வருதல், சுற்றுலா ஆகிய காரணங்கள் கொடுக்கப்படும். இதில் எதுவும் இல்லாவிட்டால் பிற காரணங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
எத்தனை பேர்
விண்ணப்பதாரர் பெயர், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் பெயர், விண்ணப்பதாரர் தவிர மற்ற பயணிகள் எண்ணிக்கை, எங்கு வரை செல்ல வேண்டும், பாலினம், விண்ணப்பதாரரின் வயது, விண்ணப்பதாரரின் அடையாள சான்றிதழ் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை உங்களது அடையாள சான்று என்று சமர்ப்பிக்கலாம். மேலும் அந்த அடையாள சான்று ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இ பாஸ் வாங்குவது ஈஸி
எந்த மாதிரி வாகனம், வாகனத்தின் பதிவு எண் என்பது பற்றியும் அதில் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தால், கூடுதல் தகவல்களை தெரிவிக்கலாம். அதற்கும் ஒரு கட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீங்கள் விவரங்களை நிரப்பி இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் நடைமுறை எளிதாக இருப்பதால் இது ஒரு கண்காணிப்பு நோக்கத்துக்கு தானே தவிர, பயணத்தைத் தடுக்கும் நோக்கம் இதில் கிடையாது என்கிறார்கள் அதிகாரிகள்.