அண்ணா பிறந்த நாள்.. சிறைவாசிகள் முன் விடுதலை.. இசுலாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு ஏன்? -வேல்முருகன்
சென்னை: அண்ணா பிறந்தநாளை ஒட்டி சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் இசுலாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு ஏன்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
இதனிடையே ராஜீவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
டோல்கேட் மூலம் எவ்வளவு வருமானம்? வெள்ளை அறிக்கை வேண்டும்! வேல்முருகன் கிடுக்கிப்பிடி!
அண்ணா பிறந்த நாள்
கடந்த ஆண்டு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்திருந்தது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
30 ஆண்டுகளுக்கு மேல்
குறிப்பாக, ராஜீவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தால், தற்போது பேரறிவாளவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
6 தமிழர்கள் விடுதலை
பேரறிவாளன் தொடுத்த இவ்வழக்கில், தமிழ்நாட்டு அமைச்சரவைத் தீர்மானமே இறுதியானது. தமிழ்நாடு அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது.
இத்தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி, எஞ்சிய நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதனை தள்ளிப்போட வேண்டிய அவசியம் இல்லை.
முன் விடுதலை
கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், வகுப்புவாத மற்றும் மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் இசுலாமிய சகோதரர்களுக்கு முன் விடுதலை மறுக்கப்பட்டது. ஆனால் கருணை என்று வரும்போது, மதம் என்ற பாரபட்சம் பார்க்க கூடாது என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து.
மறுக்கப்படுவது ஏன்?
சமீபத்தில், குஜராத்தில் ஆளும் பாஜக அரசு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்ட பில்கீஸ் பானு வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் 14 ஆண்டுகளில் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்று வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்?. சாதி, மத வேறுபாடின்றி நன்னடத்தை விதிகளின் கீழ் முன் விடுதலை பெறும் உரிமை இசுலாமியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?.
இசுலாமிய சகோதரர்கள்
எனவே, திமுக ஆட்சிக்கு வந்தால், நீண்ட காலமாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களை விடுதலை செய்வோம் என்ற தேர்தல் பரப்புரை செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், செப்டம்பர் 15 - அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி நீண்ட காலமாக சிறையில் இருக்கும் 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.