ராஜீவ் கொலை வழக்கில் எம்.கே. நாராயணன் பதுக்கிய வீடியோ கேசட்.. அம்பலப்படுத்திய சிபிஐ ரகோத்தமன்!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவிழக்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமான இன்னமும் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான், இன்று கொரோனா தொற்றுக்கு பலியான சிபிஐ அதிகாரி ரகோத்தமன் இடைவிடாமல் சொல்லி வந்த பதுக்கப்பட்ட மர்ம வீடியோ கேசட் விவகாரம்.
இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது.... இது 69 ஆண்டுகளுக்கு முன்பு (1952) வெளியான பராசக்தி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய வசனம்தான்.. ஆனால் இந்த வசனம் சாலப் பொருந்தக் கூடிய வழக்காக இருப்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இப்போது சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழர்கள் அனைவரும் உடனிருந்தவர்கள், உதவி செய்தவர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வருபவர்கள். முதன்மை குற்றவாளிகள் என பட்டியலிடப்பட்டவர்கள் ஈழப் போரில் உயிர் நீத்துவிட்டனர். இந்த படுகொலைக்குப் பின்னாள் சர்வதேச சதி இருக்கிறதா? என்பதற்கு ஆராயப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு 29 ஆண்டுகளாக ஒருவித முன்னேற்றமும் இல்லாமல் விசாரணையை இப்போதும் நடத்திக் கொண்டே இருப்பதாக கூறுகிறது. இதனால்தான் ராஜீவ்காந்தி வழக்கில் பல விசித்திரங்கள், மர்மங்கள் புதைந்திருக்கின்றன என்பது பொதுவான பார்வை.
சிபிஐ அதிகாரி ரகோத்தமன்
நாம் மேலே குறிப்பிட்டவை நாடறிந்த சில விஷயங்கள். ஆனால் நாம் அறியாத பல விஷயங்களை இடைவிடாமல் ஊடகங்களில் தாம் எழுதிய புத்தகங்களிலும் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தி வந்தவர் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த சிபிஐ-ன் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்தவர்தான் ரகோத்தமன். ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் ஆதி முதல் அந்தம் வரையிலும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளையும் முழுமையாக அறிந்தவர்.
ராஜீவ் கொலை வழக்கு புத்தகங்கள்
ரகோத்தமன் ஏற்கனவே, "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்", "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" "Assassination of Mahatma - Indira - Rajiv Gandhis" ஆகிய இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்த இரண்டு நூல்களிலும் சரி, பொதுவெளியிலும் சரி ரகோத்தமன் கேள்வி எழுப்பியது ஒரு ராஜீவ் படுகொலை வழக்கில் முக்கியமான ஒரு வீடியோ கேசட் பற்றியது.
எம்.கே. நாராயணன் கடிதம்
ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். அப்போது மத்திய உளவு அமைப்பான -ஐ.பி. தலைவராக இருந்தவர் எம்.கே .நாராயணன். ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட மறுநாள், பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு எம்.கே. நாராயணன் ஒரு கோப்பு அனுப்பினார். அதில், எங்களிடம் ஒரு முக்கியமான வீடியோ கேசட் உள்ளது. அதில் உள்ள 'பெண்மணி' ஒருவரை அடையாளம் காண முயற்சித்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார். இது அதிகாரப்பூர்வமான கோப்பு.
மறைக்கப்பட்ட கேசட்
ஆனால் ஐ.பி. தலைவராக இருந்த எம்.கே. நாராயணன், தங்கள் வசம் இருந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த அந்த கேசட்டை சிபிஐ நடத்திய எந்த ஒரு விசாரணையின் போதும் ஒப்படைக்கவே இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு. இதுபற்றி ரகோத்தமன் சொல்லி இருந்தது இதுதான்...
மர்ம முடிச்சு அவிழவில்லையே
ராஜீவ் கொலை வழக்கில் பத்திரிகை புகைப்படக்காரர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள்தான் பிரதான ஆதாரமாக இருந்தது. ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளான சிவராசன், தணு உள்ளிட்டோர் சில மணிநேரம் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் காத்திருந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். அந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார் யாருடன் பேசினர்..? எப்படி ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு முன்னதாக மாலையிடும் இடத்துக்கு மெதுமெதுவாக நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐபி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி இருக்கலாம். ஆனால் இந்த கேசட்டைத்தான் எம்.கே. நாராயணன் ஒப்படைக்கவே இல்லை.. இப்படித்தான் ரகோத்தமன் கூறி வந்தார்.
ரகோத்தமன் கேள்விக்கு பதில் இல்லையே
மேலும் "இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள்" என்றும் சிலர் மீதான சந்தேகங்களையும் ரகோத்தமன் சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறார். அந்த மாயமான மர்ம கேசட்டுக்கு என்ன ஆச்சு என்கிற இடைவிடாத கேள்விகள் இன்றுடன் ரகோத்தமன் மறைவுடன் ஆழ குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும் என்பதுதான் வரலாற்று துயரம்!