ரோசய்யாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல்
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ரோசய்யா மறைவுக்கு இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் மறைவு தேசத்திற்கு பேரிழப்பு என்று தமிழக ஆளுநர் ஆர்.என். இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த ரோசய்யாவின் மறைவு பேரிழப்பு என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
கடந்த 2009 முதல் 2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராகவும், 2010 முதல் 2016 வரை தமிழகத்தின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். ரோசய்யாவின் மறைவிற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்
ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பதிவிட்டுள்ளார். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், முதுபெரும் அரசியல் தலைவர் மறைவால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும். ரோசய்யாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான முனைவர் கே.ரோசய்யா அவர்கள் இன்று மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் இரங்கல்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் திரு.கே.ரோசய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி., அமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் என பல்வேறு பதவிகளை வகித்து நீண்ட கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தவர் திரு.ரோசய்யா அவர்கள். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். சட்டமன்ற, மேலவை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என அரசு நிர்வாகத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலும், அனுதாபங்களும் என்று பதிவிட்டுள்ளார்.