'லீடர்'.. 12வது வரிசை தந்த அதிமுகவை.. அருகிலேயே அமர வைத்து அழகு பார்த்த ஸ்டாலின்.. மாஸ் சம்பவம்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவிற்கு வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை திமுக இன்று நடத்திய விதம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று பதவி ஏற்பு விழாவில் நடந்த சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளும் முன், ஒரு குட்டி பிளாஷ்பேக்.. 2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருந்த சமயம், திமுக முதலில் முன்னிலை வகிக்க, போக போக பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் எதிர்பாராத தோல்வியை சந்தித்த திமுக 90+ இடங்களில் வென்று மிக வலுவான எதிர்க்கட்சியாக அப்போது சட்டசபைக்கு சென்றது.
வெளிநாடு வாழ் தமிழருக்கு தனி அமைச்சகம்...ஸ்டாலினுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த பதவி ஏற்பு விழாதான் திமுகவின் மத்தியில் கொதிப்புகளை ஏற்படுத்தியது. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்..
பதவி ஏற்பு விழா
இந்த 2016 தேர்தலில் வென்று முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றார். அப்போது பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு சென்றது. திமுக சார்பாக ஸ்டாலின் மற்றும் சில தலைவர்கள் அப்போது விழாவில் கலந்து கொண்டனர். இதில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்கு 12வது வரிசைக்கு பின்பே இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
முன் வரிசை
முன் வரிசையில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய சிறிய கட்சிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் கடைசி சில வரிசைகள் திமுகவினருக்கு ஒதுக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் கூட, 90+ இடங்களை வென்றும் கூட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஓரம்கட்டப்பட்டனர். அவர்களுக்கு சரியான வரவேற்பும் அளிக்கப்படவில்லை. திமுக தலைவர்கள் இப்படி நடத்தப்பட்டது பெரிய விமர்சனங்களை சந்தித்தன. திமுகவினர் மத்தியில் இது கோபத்தை ஏற்படுத்தியது.
பாஸ்ட் பார்வேட்
அப்படியே பாஸ்ட் பார்வேட் செய்தால் 2021 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த விழாவிற்கு அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு சென்ற நிலையில், அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விழாவில் கலந்து கொண்டார்.
அதிமுக திமுக
ஆனால் திமுகவோ, அதிமுக 2016ல் செய்தது போல இன்று செய்யவில்லை. ஓ. பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து, முன்பக்கம் இருந்த வரிசைகளில் அமைச்சர்களுக்கு பின்பக்கமாக உள்ள வரிசையில் அமர வைத்தனர். அதன்பின் விழா முடிந்ததும், ஓ. பன்னீர்செல்வத்துடன் திமுக தலைவர்கள் தனியாக நீண்ட நேரம் பேசினார்கள்.
ஒரே மேஜை
ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர். தன்னை ஓரம்கட்டிய அதிமுகவை, தனது முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்து, தனது அருகிலேயே உட்காரவைத்து ஸ்டாலின் இன்று அழகு பார்த்தார். 2016ல் அதிமுக செய்தது போல செய்யாமல் ஸ்டாலின் தனது எதிர்கட்சியினரை சிறப்பு மரியாதையோடு நடத்தி, புதிய உயரத்திற்கு சென்றுள்ளார். ஒரு லீடராக இன்று ஸ்டாலின் தனித்து தெரிந்தார்!
மரியாதை
அரசியல் பழிவாங்கல், தனிப்பட்ட காழ்ப்புணர்வு இல்லாமல் ஒரு தலைவராக ஸ்டாலின் இன்று உயர்ந்து இருக்கிறார். ஓ. பன்னீர்செல்வமும் முகம் முழுக்க சிரிப்போடு, ஸ்டாலினோடு இயல்பாக பழகியது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.. அரசியல் வேறுபாடுகளை மீறி.. இன்று இவர்கள் இயல்பாக பழகினார்கள். தமிழக அரசியல் நாகரீகம் இன்றைய விழாவில் புதிய உயரம் தொட்டது.. இது இப்படியே நீடித்தால் தமிழக அரசியல் சூழல் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்!