இன்று தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா.. அரசின் திட்டம் என்ன?யாரெல்லாம் எடுத்துக் கொள்ளாலாம்?
சென்னை: கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் வைரஸ் தீவிரம் உயர்ந்து வருகிறது.
இதனால் மத்திய மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கும், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11 நாட்களாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?
கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க இந்தியா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் விரைவாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிரதமர் ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி நடத்த வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இன்று தொடங்கி, நான்கு நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. இதில் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் என்ன நிலை
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 600 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. நிர்ணயம் செய்த இலக்கின்படி தற்போது வரை 1.39 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலத்தில் 37.32 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினசரி 2 லட்சம் இலக்கு
இந்தத் தடுப்பூசி திருவிழாவில் தினசரி 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாநில சுகாதார துறை திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பச் சுகாதார மையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும், அதிக பேர் பணிபுரியும் தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தடுப்பூசி முகாம்களை நடத்தச் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு?
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது வரை 45 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 7 லட்சம் கோவாக்சின் வந்துள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 18 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.