'அதை' நினைச்சா.. எனக்கே தர்மசங்கடமாக இருக்கு.. பெட்ரோல் விலையேற்றம் குறித்து நிர்மலா சீதாராமன்
சென்னை: பெட்ரோல் விலை ஏற்றத்தை நினைத்தால் தனக்கும் தர்மசங்கடமாக இருப்பதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விலை குறையும் என்பதை தவிர எந்த பதிலும் மக்களுக்கு திருப்பதி தராது என்று தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. இந்த விலை ஏற்றம் காரணமாக நாட்டிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் விலை என்பது சர்வதேச சந்தையின் விலையைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எனக்கும் தர்மசங்கடமா இருக்கு
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்பது தனக்கும் தர்ம சங்கடமாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், விலை குறையும் என்பதை தவிர வேறு எந்த பதிலும் இதில் மக்களை திருப்திப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நியமான அளவுக்கு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்துப் பேசிய அவர், "இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. எல்லா முடிவுகளையும் என்னால் மட்டும் எடுக்க முடியாது' என்றார்.
முந்தைய அரசு தான காரணம்
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்வதாகவும் இதைத் தடுக்க முந்தைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். தற்போது எரிபொருள்களின் விலையேற்றத்திற்கு இதுவே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பெட்ரோல் விலையைக் குறைக்கவே தற்போது எத்தனால் கலப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் போராட்டம்
தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். பொதுமக்களின் நலனைப் பற்றி துளியும் யோசிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து வருமானத்தை மட்டுமே பெருக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருவதாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சனம் செய்துள்ளார்.