பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக அதிகரிப்பு - சதமடித்த பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கம்
பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து சென்னையில் 99 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 2 காசுகளுக்கு விற்பனையாகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது நாளாக உயரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 2 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை நடப்பாண்டின் ஜனவரியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதனால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐயும், டீசல் ரூ.95ஐயும் எட்டியது.

மிக அதிகபட்சமாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108க்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.103ஐ தொட்ட நிலையில், திமுக அரசு மாநிலத்திற்கான வரி வருவாயில் ரூ.3ஐ குறைத்து ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. இதனால், மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.103ல் இருந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது.
கடந்த மாதத்தில் அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 15 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது. நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசும், டீசல் 29 காசும் அதிகரிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் தினம் பெட்ரோல் ரூ.99.36க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 22 காசு அதிகரித்து, ரூ.99.58க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலையேற்றத்தின் மூலம் தமிழகத்தில் 2 மாத காலத்திற்கு பின் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ தாண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 2 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது.
பெட்ரோல் விலையை ஏற்றி மீண்டும் ரூ.100க்கும் மேல் கொண்டு வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சற்றே ஆறுதல் அடைந்திருந்த மக்கள், பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாயை நெருங்கி வருவதால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications