கட்சிக்கு களங்கம்..காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்..பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக காயத்ரி ரகுராம் அவர் வகித்து வரும் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.
பாஜகவில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த உட்கட்சி பூசல் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கடந்த மே மாதம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டனர். பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலைதான் தேர்வு செய்து வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
பாஜக கூட்டணியில் அதிமுக இல்லையா? லீடர்கள் பேச்சால் சலசலப்பு! “ஸ்டாப்!” வாய்ப்பூட்டு போட்ட அண்ணாமலை!
காயத்ரி ரகுராம்
பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார்.
இதையடுத்து அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். தனது பதவி பறிக்கப்பட்டது பற்றி காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு ட்வீட்களை பதிவிட்டார். பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில், எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டார். அவரின் ட்விட்டர் பதிவுகள் பெரிய அளவில் சர்ச்சையானது.
பதவி கொடுத்த அண்ணாமலை
இந்த நிலையில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அண்ணாமலைக்கு காயத்ரி நன்றி தெரிவித்தார். அதோடு இந்த பொறுப்பில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அறிவித்தார்.
கோப ட்வீட்கள்
இந்த நிலையில்தான் நேற்று திடீரென கோபமாக காயத்ரி ரகுராம் பதிவிட்டு இருந்தார். அதில், சில சமயங்களில் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வரும். என்னைப் பற்றியும் எனது வேலையைப் பற்றியும் நான் வருத்தப்பட்டேன் சொன்னதற்காக ட்ரோல் செய்யப்பட்டேன் அதுவும் ஒரு விசுவாசி குழு பெரும்பாலும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே. திமுக விசிக ட்ரோல்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் கட்சியையோ அல்லது எந்த தலைவரையோ எதிர்த்து பேசியதில்லை. ஆனால் சில உண்மையான காரியகர்த்தாக்கள் நான் உணர்ந்ததை புரிந்து கொண்டனர், சிலர் அழைத்தார்கள் மற்றும் பலர் எனக்கு ஆறுதல் கூறினர். நன்றி.
கடின உழைப்பு
எனது வருத்தம் ஒரு கட்சியின் உள் பிரச்சினை அல்ல. யாரிடமும் குறை புகார் கொடுக்க முடியாது. என் கடின உழைப்பின் நம்பிக்கையும் தோல்வியும் மட்டுமே எனக்கு பதிலளிக்க முடியும். கடவுள் மட்டுமே பதில் சொல்ல முடியும். கட்சியை விட்டு வெளியேறும்படி என்னைக் கேட்டவர்கள், குறிப்பாக விசுவாசமான குழு - என்னிடம் ஒரு பதில் உள்ளது - நான் 8 ஆண்டுகள் எனது தொழில் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு தேசத்திற்காக சேவை செய்துள்ளேன், தொடர்ந்து செய்வேன். என்னை கட்சியை விட்டு வெளியேறுமாறு கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
விமர்சனம்
சமூக வலைதளங்களில் என் மீதும், எனது குழுவினர் மீதும் எனது கருத்துக்களை வெளிப்படையாக வைக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியவர்கள் சமூக வலைதளங்களில் என்னை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். ஏன்? நீங்கள் அனைவரும் சென்று என் மீது அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கலாம், என்று குறிப்பிட்டு இருந்தார்.
ட்விட்டரில் கேலி
இதனிடையே பாஜக ஆதரவு ஐடி ஒன்று காயத்ரி பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளது. அதில், ட்விட்டர்ல 4 followers வெச்சுக்கிட்டு PM ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு...தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லானா மானாட மயிலாட போய் choreographer வேலைய பாரு, என்று காயத்ரி தொழிலை சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்துள்ளார். இதை தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் லைக் செய்துள்ளார்.
காயத்ரி பதிலடி
இதற்கு நேற்றைய தினம் காயத்ரி பதிலடி கொடுத்தார். அதில், செல்வகுமார் காவி சோசியல்
மீடியா கம்பனி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்பனியில் 2000 பேர் இருக்கிறார்கள். என்னை மற்றும் சீனியர் பாஜக தலைவர்களை கிண்டல் செய்வதுதான் வேலை இவர்களுக்கு. பெண்ணான எனக்கு எதிராக குழுவாக அவர்கள் போஸ்ட் செய்கிறார்கள். நான் ஒரு பிரதமரோ, முதல்வரோ அல்லது கட்சியின் தலைவரோ அல்ல, மற்றவர்கள் போல் அந்த லட்சியம் எனக்கு அல்ல. சிலரை போல ஒவ்வொரு போஸ்டுக்கும் போலியான லைக்கோ, போலியான பாலோயர்களோ வைத்து நான் என்னை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உங்களுடைய சோஷியல் மீடியா டீம் என்னை திமுக கைக்கூலி, க்ரிப்டோ, பாஜகவில் இருந்து வெளியேறு என்றெல்லாம் விமர்சனம் செய்கிறது.
பின்னணி தெரியுமா
நான் நடிகை, நடன பயிற்சியாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உங்கள் பின்னணி அவர்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் பெங்களூரில் தலைமறைவாக இருந்தீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் விளம்பரங்களுக்காக நீங்கள் எங்களின் பிரபலமான பாடல்களை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்களை பிரஷாந்த் கிஷோர் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். என்னை இன்னும் சில ட்ரோல் செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை பற்றி நான் கவலைப்படவில்லை, என்று காயத்ரி ரகுராம் தெரிவித்து இருந்தார்.
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்
இந்த நிலையில் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.