வலிமையான கோகோ கோலாவை தடை செய்த எளிய மனிதர்.. ஜார்ஜ் பெர்னாண்டஸ்
Recommended Video
சென்னை: கர்நாடக மாநிலம், மங்களூருவில் 3-6-1930 அன்று பிறந்த பாதுகாப்பு துறை முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் பூர்வீகம் தூத்துக்குடி என்றும் கூறப்படுகிறது. தான் வகித்த பொறுப்புகளுக்கு சமரசமின்றி நியாயம் செய்த எளிமையான மனிதர் அவர்.
கிறிஸ்தவ பாதிரியாராக கல்வி பயின்றவர் இயல்பிலேயே தனக்குள் இருந்த புரட்சிகர எண்ணங்கள் காரணமாக தொழிற்சங்க வாதியாக உருமாறுகிறார். 1950 முதல் 1960 ம் ஆண்டுவரை ரயில்வேயில் பணி புரிந்த கால கட்டத்தில் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்துகிறார். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் காரணமாக தொழிற்சங்க தலைமை பதவி இவரைத் தேடி வருகிறது. அதன் பின்னர் 1967- ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் காங்கிரஸ் கட்சியின் வலிமை வாய்ந்த வேட்பாளர் ஒருவரை எளிதாக தோற்கடித்து விடுகிறார்.
தேர்தலில் பெற்ற பெருவெற்றி, துணிச்சலான செயல்பாடுகள் இவற்றின் விளைவாக அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக உயர்கிறார். அப்போது 1974-ம் ஆண்டு இவரது தலைமையில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அந்தப் போராட்டம் இன்றளவும் மிகவும் வெற்றிகரமான போராட்டமாக கருதப்படுகிறது.
1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்துகிறார். இந்த நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தவர்களுள் ஒருவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். எதிர்த்து குரல் கொடுத்தவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வேட்டையாடிய போலீசாரின் கண்களில் சிக்காமல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகள் தலைமறைவாக வாழ்கிறார். இதற்கு இடையில், பரோடா வெடிகுண்டு வழக்கில் கடந்த 1976-ம் ஆண்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலும் மோசமான கொடுமைகளை சந்தித்த அவர் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். அப்போது மத்திய அரசில் தொழில் துறை அமைச்சராக பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்போதே பெருவலிமையோடு இந்தியாவில் வியாபாரம் செய்து வந்த கொக்கோகோலா நிறுவனத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சமதா கட்சி
ஜனதா தளம் கட்சியில் இருந்து 1994-ம் ஆண்டு வெளியேறிய ஜார்ஜ் பெர்னாண்டசும் நிதீஷ் குமாரும் சமதா கட்சி என்னும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினர். கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்ற தேர்தல் வர 1996- ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது சமதா கட்சி. இதில் இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் 6 எம்.பிக்களும் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து ஒரு எம். பி. யும் ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு எம். பி என மொத்தம் 8 மக்களவை உறுப்பினர்கள் கிடைத்தனர்.
அதன் பின்னர் 1998 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 1994-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட சமதா கட்சி 4 ஆண்டுகளில் 12 மக்களவை உறுப்பினர்களை பெறுமளவுக்கு கட்சியை வளர்க்க அரும்பாடு படுகிறார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
பின்னர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாற்றங்களில் சமதா கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியோடு ஐக்கியமாகிறது. 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோடு சமதா கட்சியை இணைத்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக மீண்டும் அதிலிருந்து வெளியேறி சமதா கட்சிக்கு வருகிறார். இவரோடு ஜெயா ஜெட்லியும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து
வெளியேறுகிறார்.
பெற்றோரின் விருப்பபடி பாதிரியாராக பணியாற்ற துணிந்தபோதும் சரி, தொழிற்சங்க வாதியாக பணியாற்றிய போதும் சரி, தொழில்துறை அமைச்சராக பணியாற்றியபோதும் சரி பின்னர் கட்சி தலைமைப் பொறுப்பில் அமர்ந்தபோதும் சரி, அதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோதும் சரி தான் வகித்த அத்தனைப் பதவிகளுக்கும் எவ்வித சமரசமும் இன்றி நியாயம் செய்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்