அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சி நாங்கள்.. ஜி.கே. வாசன் அதிரடி.. செம்ம ட்விஸ்ட் !
சென்னை: அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாகவே இருக்கிறோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்காமல் வேட்பாளர் பட்டியலை அஇஅதிமுக அறிவித்துள்ளது. இதனால் தமாகா தலைவர் ஜிகே வாசன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறலாம் என்ற பேச்சும் உலாவந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாகவே இருக்கிறோம் என்று ஜிகே வாசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிமுக தலைமை நேற்று சீட்டை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டுவிட்டது.

அதிமுக பட்டியல்
அத்துடன் நேற்று 171 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அதிமுக அறிவித்துவிட்டது. ஏற்கனவே வெளியிட்ட 6 வேட்பாளர்களை சேர்ந்ததால் இதுவரை 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

பேசவில்லை
இந்நிலையில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று முதல்முதலாக கூட்டணியை உறுதி செய்த ஜிகே வாசனுக்கு இதுவரை அதிமுக சீட் ஒதுக்கவில்லை. அதிமுக உடன் நட்பில் இருந்து வந்த ஜி.கே.வாசன் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால் முதல் முதலாக கூட்டணியை உறுதி செய்த தமாகாவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தான் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. பாமக பேசிவந்தது. இந்த கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தமாகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

குறைவான தொகுதிகள்
இதனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் 7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. ஆனால் 7 தொகுதிகள் கூட அதிமுக தரவில்லை . இதனால் வாசன் அதிருப்தியில் இருந்தார் என்று சொல்லப்பட்டது.

அதிமுக பட்டியல்
இந்நிலையில், நேற்று தமாகாவிற்கு சீட் ஒதுக்காத நிலையில் அதிமுக 171 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதனால் தமாகாவினர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இதனால் ஜி.கே.வாசன் இன்று மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஊடகங்களில் வெளியான செய்தியை ஜிகே வாசன் மறுத்துள்ளார்.

ஜிகே வாசன் பேட்டி
செய்தியார்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது என்றார். இதன் மூலம் தமாகா அதிமுக கூட்டணியில் நீடிப்பது உறுதியாகி உள்ளது. தமாகாவிற்கு 6 தொகுதியை ஒதுக்கி தங்கள் வசப்படுத்தி உள்ளார் எடப்பாடியார். எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அதிமுக 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் மிச்சம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications