நீட் தேர்வு தடைன்னு சும்மா மாணவர்களை ஏமாற்றாதீங்க! பாடங்களை தரம் உயர்த்துங்க: சொல்கிறார் ஜி.கே.வாசன்
சென்னை: அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மாணவர்களை ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான நீட் தகுதி தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு, மருத்துவக் கனவை எட்டிபிடிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே இரு நாட்களுக்கு முன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் பயிற்சி மேற்கொண்ட தனுஷ் என்ற மாணவர் தோல்வி பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது தமிழ்நாட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொடுமை: நீட் தேர்வு பயம்.. அரசு பள்ளியில் படித்த.. ஆட்டோ ஓட்டுநர் மகன் தூக்கிட்டு தற்கொலை
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் என்று தமிழ் நாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பாக ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித்தரம், வெளிப்படைத்தன்மை உயர வாய்ப்பு உருவாகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பலரும் பயனடைகின்றனர். அரசும், தனியாரும் மருத்துவக் கல்வியை வியாபார நோக்கத்துடன் பார்க்கும் தவறான கண்ணோட்டம், நீட் தேர்வால் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்பி முடக்கிவிட வேண்டாம். அதற்கு பதிலாக நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும் என்று பேசியுள்ளார்.