வெளிநாடு வாழ் தமிழருக்கு தனி அமைச்சகம்...ஸ்டாலினுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி
சென்னை : தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். பதவியேற்ற முதல் நாளில் ஆவின் பால் விலை குறைப்பு, மாநகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்பன உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தனி துறை அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறி இருந்தார். தற்போது இந்த அறிவிப்புக்களுக்காக உலக தமிழ் வம்சாவளி அமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் இவ்வேளையில் வெளிநாடு வாழ் தமிழருக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்க உள்ளார். இதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்கள் படும் இன்னல்களை கலையும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்று சிம்ம சொப்பனமாக மு க ஸ்டாலின் விளங்குகிறார்.
உலக மக்கள் தொகையில் 2% உள்ள ஒரு சமூகம் அதற்காக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது இதுவே முதல் தடவை. மேலும் இவ்வமைச்சரவை இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனுபவமிக்க மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அமைச்சர்களாக தென்படுகிறார்கள். இதன் மூலம் 54 வருட அரசியல் அனுபவம் அமைச்சரவை பட்டியலில் தெரிகிறது. இந்த சிறப்பான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியதற்காக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி கூறுகிறது என அவ்வமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.