ஆளுநர் இருக்கும்போதே அதிரடி தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்.. திடீரென வெளியேறிய ரவி.. அனல் பறந்த அவை
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார்.
சபை நடவடிக்கை முடிவதற்கு முன்னரே ஆளுநர் ரவி வெளியேறிய நிகழ்வால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் ஸ்டலின், இதற்காக கண்டனம் தெரிவித்ததோடு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

முதல்நாளே இப்படியா
தமிழக சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வழக்கம் போல் ஆளுநர் உரை இதில் இடம்பெற்றது. அண்மையில் தமிழ்நாடு குறித்து ஆளுநர் ரவி பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவை தொடங்கியவுடன் முழக்கங்கள் எழுப்பியதுடன் வெளிநடப்பும் செய்தனர். இதனால் அப்செட் ஆன ஆளுநர் ரவி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது உரையை வாசித்து முடித்தார்.

ஆளுநர் ஷாக்
இதனிடையே அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் பாதி பகுதியை ஆளுநர் ரவி படிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், அச்சிடப்பட்ட உரையை மட்டுமே அவை குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஆளுநர் அவையில் இருந்தபோதே கொண்டு வந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் ரவி ஒரு நொடி ஷாக் ஆனதோடு, அங்கிருந்து கடும் கோபத்துடன் வெளியேறிச் சென்றார்.

தடுக்கவில்லை
இதனிடையே ஆளுநர் ரவி வெளியேறும் போது அவரை தடுக்கவோ, சமாதானப் படுத்தவோ அரசுத் தரப்பில் யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போனால் போங்க எங்களுக்கு என்ன கவலை என்கிற வகையில் ஆளுநர் வெளியேறும் போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போது ஆளுநர் வெளியேறிய நிகழ்வால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினர் கூச்சல்
ஆளுநரை அவமரியாதை செய்துவிட்டதாக பாஜகவினர் வரிந்துக் கட்டிக் கொண்டு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பதில் கொடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் பதிலுக்கு எழுந்து நின்றனர். முதல்வர் அவர்களை நோக்கி அமைதியாக அமருமாறு கேட்டுக்கொண்டதற்கு பின்னர் இருக்கைகளில் அமர்ந்தனர். முதல்நாளே இப்படி என்றால் இனி அடுத்தடுத்த நாட்களில் என்னவெல்லாம் நிகழுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications