எகிறிய எதிர்பார்ப்பு.. கடைசியில் மாறியது ஏன்? ஜனாதிபதி தேர்தல் குறித்து மனம் திறந்த ஆளுநர் தமிழிசை
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அப்போது என்ன நடந்தது என்பது குறித்து சில முக்கிய தகவல்களை அவர் முதல்முறையாக வெளிப்படையாகக் கூறி உள்ளார்.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது.
அதில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அது நடக்கவில்லை. இதனிடையே அது தொடர்பாகத் தமிழிசை சவுந்தரராஜன் இப்போது மனம் திறந்து உள்ளார்.
காவி பலம் கறுப்பால் மறையக் கூடாது.. உயிரும் உடலும் போல் தமிழும் ஆன்மிகமும்.. தமிழிசை செளந்தரராஜன்!
குடியரசுத் தலைவர் தேர்தல்
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு களமிறங்கினார். அதேபோல எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமித்த வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறக்கப்பட்டார். இருப்பினும், இந்தத் தேர்தலில் திரௌபதி முர்மு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் 16ஆவது குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பு ஏற்றார்.
வேட்பாளர்கள்
இருப்பினும், திரௌபதி முர்முவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பு, பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் என்று பலரது பெயர்களும் அடிப்பட்டன. இறுதியில் தான் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்படி பரீசிலனையில் இருந்த பெயர்களில் ஒருவர் தான் தமிழிசை சவுந்தரராஜன். அப்போதே இவர் தெலங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன் குடியரசுத் தலைவராகி இருந்தால், அப்துல் கலாமிற்குப் பின் தமிழகத்தில் இருந்து தேர்வான குடியரசுத் தலைவர் என்ற பெயரை அவர் பெற்று இருப்பார். இருப்பினும், அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எந்த இடத்திலும் எதுவும் கூறாத நிலையில், இப்போது முதல்முறையாக அது குறித்து மனம் திறந்து உள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா
சென்னை கிண்டியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அங்கு அவர் "Rediscovering Self in Selfless Service" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தான் அவர் இது தொடர்பாகக் கருத்துகளைப் பதிவிட்டார். தேசியக் கட்சியில் தலைவராக இருந்தது போது தமிழகத்திற்கு பல்வேறு விஷயங்களைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
தலையிட்டது இல்லை
மேலும், ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இடையூறும் செய்வதில்லை என்று குறிப்பிட்ட அவர், தாக்கினாலும் தான் சிலையாகத்தான் மாறுவேன் என்றும் தன்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள்தான் அதிகம் என்றும் தெரிவித்தார். மேலும், ஆளுநரான தனக்கு அதிகாரம் இருந்தாலும், தனி விமானத்தை ஒருபோதும் பயணங்களுக்கு நான் பயன்படுத்தியதில்லை என்றும் சாப்பாட்டுப் பணத்தைக் கூட செலுத்தி விடுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மறுத்துவிட்டேன்
அதன் பின்னர் குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "குடியரசுத் தலைவர் தேர்தல் சமயத்தில் எனக்கு வேட்பாளர் ஆகும் வாய்ப்பு வந்தது. ஆனால், நான் தான் அதை மறுத்துவிட்டேன். நான் எப்போதும் மக்களோடு மக்களாகத் தான் இருப்பேன் என்று தெளிவாக கூறிவிட்டேன். மக்களுடன் பயணிப்பது தான் எனக்குப் பிடிக்கும். அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
மக்களுக்கு உதவ வேண்டும்
நான் பெரிய மருத்துவராகத் தான் இருந்தேன்.. இருப்பினும் வருமானத்தை விட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன். இப்போது பதவியில் இருப்பதும் மக்களுக்குத் தான். இயல்பாக மக்களோடு மக்களாக, மக்களுடன் இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு வேண்டும்" என்றார்.