சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதளம்.. கடல்நீர் உட்புகும் ஆபத்து என எச்சரிக்கை
Recommended Video
சென்னை: சென்னை மாநகரில் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்ட காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகர மக்களின் ஒரு நாள் குடிநீர் தேவை 80 கோடி லிட்டர் ஆகும். ஆனால் குடிநீர் விநியோகம் என்பது 650 மில்லியன் கூட கிடைப்பதில்லை. இதனால் சென்னையில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு மக்கள் நிலத்தடி நீரையையே பெரிதும் நம்புகிறார்கள்.
இதனால் வரன்முறை ஏதும் இன்றி நிலத்தடி நீரை உறிஞ்சிய மக்கள் மழை நீரை சேகரிப்பதில் அதே அளவு ஆர்வம் காட்டாத காரணத்தால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுதோறும் குறைந்து வந்தது. இதன் விளைவாக கடந்த சென்னையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலத்தடி நீர் மட்டம் (2012ம் ஆண்டு) இப்போது பெரிய அளவில் சரிந்துவிட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் 3 முதல் 4 மீட்டர் வரை நிலத்தடிநீர் மட்டம் சரிந்துவிட்டது
நிலத்தடி நீர்
சென்னை அடையாறு பகுதியில் 3.89 மீட்டரில் இருந்து 6.75 ஆகவும் பெருங்குடியில் 4.35 மீட்டரில் இருந்து 6.96 ஆகவும், ராயபுரத்தில் 4.26 மீட்டரில் இருந்து 7.65 ஆகவும் சென்றுவிட்டது.
தண்டையாளர் பேட்டை
இதேபோல் திருவெற்றியூரில் 3.46 மீட்டராக இருந்த நீர் மட்டம் தற்போது 4.93 மீட்டராக சரிந்துள்ளது. மணலியில் 2.81ல் இருந்து 5.14 ஆகவும், மாதவரத்தில் 3.85 மீட்டரில் இருந்து 6.42 ஆகவும், தண்டையாளர் பேட்டையில 3.84ல் இருந்து 7.51 ஆகவும் சரிந்துள்ளது.
கோடம்பாக்கம் தேனாம்பேட்டை
திருவிக நகரில் 2.71ல் இருந்து 7.23 ஆகவும், அம்பத்தூரில் 4.71ல் இருந்து 7.98 ஆகவும், அண்ணா நகரில் 3.82 மீட்டரில் இருந்து 6.44 ஆகவும், தேனாம்பேட்டையில் 3.77ல் இருந்து 6.49ஆகவும், கோடம்பாக்கத்தில் 4.01ல் இருந்து 7.01ஆகவும் சென்றுவிட்டது. இதேபோல் வளசரவாக்கத்தில் 3.88 மீட்டர் என்ற அளவில் இருந்த நிலத்தடி நீர் 6.92 என்ற அளவிற்கு கீழ் சென்றுவிட்டது.
கடல் நீர் ஆபத்து
தற்போது சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் பல இடங்களில் 200 அடி முதல் 400 அடிவரை சென்றுவிட்டது. இதனால் கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது. எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிலத்தடி நீர்வாரியம் தெரிவித்துள்ளது.