நீட் விலக்கு சாத்தியமா? தமிழ்நாடு பாணியில் பிரதமர் மோடியே எதிர்த்துள்ளார்.. வரலாறு என்ன?
சென்னை: 2012ல் குஜராத் முதல்வராக இருந்த போது இன்றைய பிரதமர் மோடி நீட் தேர்வை எதிர்த்தவர் தான்... ஆனால் 2014 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அப்படியே நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இந்நிலையில் 2012 ல் நீட் தேர்வு மசோதாவை கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் முக்கியமானது குஜராத், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தான் .
Recommended Video
கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்வது என்பது மத்திய அரசு நினைத்தால் தான் சாத்தியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தால் வரிசையாக ஒவ்வொரு மாநிலமும் விலக்கு கேட்கும் என்பதால் அதை அவ்வளவு எளிதில் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்பது நிஜமான உண்மை.

நீட்டை கொண்டுவந்தது யார்?
நீட் தேர்வை யார் கொண்டு வந்தது. 2012ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. திமுகவும் அந்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. அப்போது தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் அப்போது மாநிலங்களுக்கு விலக்கு தரும் வசதிகள் இருந்தது என்று திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள்,

நீட் தேர்வு கட்டாயம்
ஆனால் 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நீட் தேர்வை அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கட்டாயம் ஆக்கியது என்கிறார்கள் திமுகவினர். அதனால் தான் நீட்தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் உச்ச நீதிமன்றம் விலக்கு அளிக்க மறுத்துவிட்டது என்றும், மத்திய அரசும் அப்போது தமிழகத்திற்கு விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்தது என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் திமுகவினர்.

வரலாறு என்ன
திமுகவினர் இதுபற்றி கூறும் போது, நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசைக் கொச்சைப்படுத்துபவர்கள், பிரதமர் மோடி 2012ல் குஜராத் முதல்வராக இருந்த போது, நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீட் தேர்வை எதிர்ப்பதுதான் குஜராத் அரசின் நிலைப்பாடு என்று கூறியதுடன், ஒரே சமயத்தில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஒரு மாநிலத்தால் சட்டத்தை மறுக்க முடியாது என்ற வாதம் அர்த்தமற்றது என்றும், அப்படியானால், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நமது அரசியலமைப்பில் பிரிவு 254 (2) ஐ சேர்க்க மாட்டார்கள் என்றும் அப்போது மோடி தலைமையிலான குஜராத் அரசு வாதாடியது என்கிறார்கள் திமுகவினர்

நிபுணர் குழு ஏன்
தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக நேற்று கொண்டுவந்துள்ள தீர்மானம், நீட் தேர்வை தமிழகத்தில் இல்லாமல் செய்துவிடுமா என்றால் சில வரலாறுகளை பார்ப்போம். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும் போது "நீட் தேர்வு ரத்து நேரடியாகச் செயல்படுத்த முடியாது. 2006-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியை இழப்பதற்கு முன்பு நுழைவுத் தேர்வு இல்லாமல் தொழிற்கல்வியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தச் சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பில், 'எந்தவிதமான வல்லுநர் குழுவின் ஆலோசனை இல்லாமல் இயற்றப்பட்ட சட்டம்' எனக் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறவில்லை எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டம் எப்படி
ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற கருணாநிதி டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழுவுடைய பரிந்துரையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. 2007-ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது உயர்நீதிமன்றம். ஆக, வல்லுநர் குழுவின் தேவை என்பது இதுதான். அந்தக் குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்வதுதான் அரசின் மரபு. அதன்படி தான் தற்போது நீதியரசர் ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில், நீட்டுக்கு எதிரான வலுவான வாதங்களை முன்வைத்து இயற்றப்பட்டுள்ள சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அங்கே இது தீவிர விவாதத்தை உருவாக்கும். ஒருவேளை ஒப்புதல் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு அரசே நீதிமன்றத்தை அணுகலாம் என்கிறார்கள்.

தமிழ்நாடு
இதனிடையே நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் மேற்கு வங்காளமும் தமிழ்நாடும் மட்டுமே தொடர்ந்து எதிர்த்தன. இறுதியாகத் தற்போது மேற்கு வங்கமும் மத்திய பாடத்திட்டத்துக்கு ஏற்ப தனது பாடத்திட்டத்தை மாற்றிக்கொண்டு நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நீட் தேர்வை எதிர்க்கும ஒரே மாநிலம் என்றால் அது தமிழ்நாடு மட்டுமே.

மிக கடினம்
தற்போதைய நிலையில் கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்வது என்பது மத்திய அரசு நினைத்தால் தான் சாத்தியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை என்கிறார்கள் கல்வியாளர்கள். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தால் வரிசையாக ஒவ்வொரு மாநிலமும் விலக்கு கேட்கும் என்பதால் அதை அவ்வளவு எளிதில் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்பது நிஜமான உண்மை என்கிறார்கள் கல்வியாளர்கள்.












Click it and Unblock the Notifications