முதல்வர், அமைச்சர்கள் சார்பில் அரசு வக்கீல்கள் அவதூறு வழக்குகளை தொடர முடியுமா.. ஹைகோர்ட் கேள்வி
சென்னை: அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முதல்வர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

பின்னர் அந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அனைவரும் தாக்கல் செய்த மனுக்களில், அமைச்சர்கள் என்ற முறையில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடர அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என அவர்களது மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்குகளை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications