20 வி.சி.க. தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடை
சென்னை: தமிழக பாஜகவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 20 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக அப்போதைய தலைவர், மற்றும் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசி வந்ததைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் முன் கடந்த அக்டோபர் மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இப்போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 20 பேர் மீது கோவை காட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, விடுதலை சிறுதைகள் கட்சியை சேர்ந்த இலக்கியன் உட்பட 20 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், போராட்டத்தின் போது எந்த வன்முறையும் ஏற்படாத நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், கோவை நீதிமன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 20 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 21 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.