கனமழை...மோசமான வானிலை - சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து
சென்னையில் கனமழை காரணமாக வானிலை மோசமாக உள்ளதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கனமழை காரணமாக வானிலை மோசமாக உள்ளதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் 4 விமானங்களும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. நாகை, திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 31 செ.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் 4 விமானங்களும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, மும்பை, ஹார்ஜா விமானங்கள் வருகை, புறப்பாடு என இருவழித் தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும் மாலை நேர விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ, ஏர் அரேபியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே வரும் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பிறகே, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறுமா ? அல்லது புயலாக மாறுமா என்பது தெரியவரும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications