சிதம்பரம் கோவில்: பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசிப்பதை தடுக்கக்கூடாது.. தீட்சிதர்களுக்கு ஐகோர்ட் ஆணை!
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவின் போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை எனவும், ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் ஆனால் விழா காலங்களில் பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
தீட்சிதர்கள் தரப்பு பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications