“ஹிஜாப்” பெண் அடிமைத்தனம்.. இந்தியா - ஈரானில் வெடித்த போராட்டங்களில் “ஒரு” ஒற்றுமை - இயக்குநர் நவீன்
சென்னை: ஈரானில் பெண்கள் ஹிஜாபை எரித்தும் இந்தியாவில் பெண்கள் ஹிஜாப் தடை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒரே ஒரு ஒற்றுமை இருப்பதாக மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஹிஜாப் அணிந்து வருவதை பார்த்தால் சக மாணாக்கர்களுக்கு பன்முகத் தன்மை பற்றி புரியுமே- உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆங்காங்கே ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.
ஈரான் போராட்டம்
அதே நேரம் ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தால் 22 வயது இளம்பெண் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி போராட்டமாக வெடித்து இருக்கிறது. கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரிந்துள்ளனர்.
இயக்குநர் நவீன்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன், "ஈரானில் பெண்கள் ஹிஜாபை எரித்து போராடுகின்றனர். இந்தியாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து போராடுகின்றனர். இரண்டு போராட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை, ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது. அணிந்தே தீரவேண்டும், அணியவே கூடாது எனும் இரண்டு கட்டுப்பாடுகளும் ஆதிக்கமே.
தடை செய்ய முடியாது
பெண் என்ன அணிய வேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்க வேண்டும். ஆண்களோ மதமோ தீர்மானிக்க கூடாது. சீக்கியர்களின் டர்பனை, ஹிந்துக்களின் திருநீரு குங்குமத்தை, தாலி எனும் பெண்னடிமை சின்னத்தை எப்படி தடை செய்ய முடியாதோ அப்படி ஹிஜாபையும் தடை செய்ய முடியாது.
ஹிஜாபிலிருந்து வெளியேற வேண்டும்
கைம்பெண்கள் பூபொட்டின்றி வெள்ளை புடவை கட்டும் முறை மெல்ல மறைவதுபோல், இவை அனைத்தும் மறையும். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப், பர்தா எனும் பெண்ணடிமை முறைகளிலிருந்து தாங்களாக வெளியே வர வேண்டும். ஆணின்றி பெண்களால் தாக்குபிடிக்க முடியும்.
மாய வலைகள்
ஆனால் பெண்னின்றி ஆண் வாழ்வது கடினம். அதனால்தான் ஆண்களால் உருவாக்கப்பட்ட மதச்சட்டங்கள், பெண்னை காலம் முழுதும் தனக்கு கட்டுப்பட்டவளாக வைத்திருக்க 'கற்பு, பதிபக்தி, குடும்ப சமூக கடமை' போன்ற வஞ்சக சொற்களை மாயவலைகளை கட்டிவைத்துள்ளனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.