இந்தியை திணித்தால் திமுக போர் தொடுக்கும்... ஸ்டாலின் காட்டம்
சென்னை: மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வரலாம் என பாஜக அரசு, தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு வழி அமைத்து விடாது என்றே இன்னும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மும்மொழிக் கொள்கை பேராசைக்கனவும் அதற்காகப் பிழையான காரியமும் அவர்களுக்குப் பேரிடரை ஏற்படுத்திவிடும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்!
— M.K.Stalin (@mkstalin) June 1, 2019
இதுகுறித்து கழக MP-க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்!#StopHindiImposition pic.twitter.com/1lRjxHOqWu
இந்தி உட்பட மும்மொழி திட்டத்தை அமல்படுத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு அளித்திருப்பது அதிர்ச்சி தருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக அரசை மிரட்டி மும்மொழி திட்டத்தை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கனவு காண்கிறதா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உணவு டெலிவரிக்காக ஓவர் ஸ்பீட்.. 616 ஸ்விக்கி, ஜொமோட்டோ பாய்ஸ் மீது வழக்குப்பதிவு
பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல் வீசுவது போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மும்மொழித்திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் பாஜக அரசுக்கு பேரிடரை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள மு.க. ஸ்டாலின், மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி உடனே கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.