"நாயகன்".. பாஜகவுக்கே ஜெர்க் தந்து.. காங்கிரஸையும் மிரள செய்து.. சகாப்தம் ஈன்றெடுத்த வி.பி. சிங்..!
மண்டல் கமிஷன் நாயகன் விபி சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது
சென்னை: பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்திய விஸ்வநாத பிரதாப் சிங் என்கிற விபி சிங்கின் பிறந்த நாள் இன்று..!
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் - இவர் சீமான் வீட்டு பிள்ளை.. மன்னர் பரம்பரை இளவரசர்.. இவரை எல்லாரும் "ராஜா" என்றுதான் கூப்பிடுவாங்களாம்..!
ஆனால், இவரது பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் துளியும் சம்பந்தமே இல்லை.. கருணை கடலான இவரது அந்த ஈர மனசுதான் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு வரை உயர்த்தியது.. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்தவர்..

நல்ல இதயம்
நல்ல இதயம் கொண்டவர்... அந்த இதயத்தில் ஏழைகளின் மீது பாசத்தை நிரப்பி நிரப்பி வைத்திருந்தவர். ஏழைகளும் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று இறுதிவரை உடும்பாய் இருந்தவர்.. ஒரு பேட்டியில் சொல்கிறார், "இந்த விபி.சிங்கை தூக்கில் தொங்கவிடுங்கள், ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியை கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு, யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கி சென்றுவிடும்" என்று எச்சரித்தவர்.

பதவி
பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்கியதுடன், அதற்காகவே பதவியையும் இழந்த மாமனிதர்.. பிரதமர் பதவியிலிருந்து விலகியபிறகுகூட, எந்த பதவியை தேடி கொண்டு போய் தந்தாலும் அவர் ஏற்க மறுத்தவர்.. "உடலில் வலிமையிருந்தால் இந்நேரம் நான் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன்" என்று துணிந்து சொன்னவர்.

துணிச்சல்
தன்னுடைய சொந்த மாநிலத்தில் கொள்ளைகளை ஒழிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்.. இப்படி யாராவது இன்று செய்வார்களா? நிதியமைச்சராக இருந்தபோது, அம்பானி மீதும் அமிதாப் பச்சன் மீதும், குவிந்த புகார்களுக்கு தைரியமாக நடவடிக்கை எடுத்தவர்.. இப்படி யாராவது இன்று செய்வார்களா? என்பது சந்தேகமே.

எம்ஜிஆர்
அவ்வளவு ஏன், எம்ஜிஆருக்கு 'பாரத ரத்னா'விருது கொடுத்தபோது, நாட்டுக்காக மிக முக்கிய பணிகள் செய்த அம்பேத்கருக்கு பாரத ரத்னா தராதபோது, எம்ஜிஆருக்கு எதுக்கு இத்தனை அவசரமாக பாரத ரத்னா தர வேண்டும் என்று காங்கிரஸை விமர்சித்தவர்.. அத்துடன் தன்னுடைய ஆட்சியில் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியதுடன், நாடாளுமன்றத்திலும் அம்பேத்கரின் படத்தை கம்பீரமாக இடம்பெறவும் வைத்தார்.

அபூர்வம்
ஒடுக்கப்படாத சாதிகளில் பிறந்து, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே இப்படி வாழ்பவர்கள் அபூர்வம்.. இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி, ஒரு சாரார் புறக்கணித்ததை எக்காலத்திலும் ஏற்க முடியாத ஒன்று.. "பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை" என்று விபி சிங் போல், எத்தனை பேரால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியும் என தெரியவில்லை..

குடிமகன்
தன் வாழ்நாளின் இறுதிவரை கரைபடியாதவர்.. ஆஸ்பத்திரியில் சிகிச்சை இருந்தபோதும்கூட, மக்களின் நலனை பற்றியே அவரது சிந்தனை சுற்றி சுற்றி வந்ததாம்.. கடைசிவரை யாருக்காகவும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமலும், வெறுப்பரசியலை வெறி கொண்டு வெறுத்தவர் விபி சிங்.. வெறும் 11 மாதங்களே இந்த நாட்டை ஆண்டாலும், ஒரு நல்ல தலைவன் குடிமக்களால் என்றென்றும் மதிக்கப்படுவார் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் விபி சிங்..!

மறக்க கூடாது
சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் விபி சிங்.. இந்த ஜனநாயக அமைப்பில் இன்று அனைத்தையும் தீர்மானிப்பது "பெரும்பான்மையே" என்ற எழுதப்படாத கோட்பாடு இருந்தாலும் சரி.. அரசியலையே புரட்டி போட்ட இந்த குணாளன் விபி சிங் செய்த சீர்திருத்த பங்கை, யாரும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.. மறுத்துவிட முடியாது.. மறந்துவிட முடியாது.. மறந்துவிடவும் கூடாது!!!












Click it and Unblock the Notifications