கொரோனா சிகிச்சையில் புதிய திருப்புமுனை... அறிகுறி இல்லாதவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை
சென்னை: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லையென்றால் அவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக கூட கருதலாம். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ள ஆணையில், கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர்களுக்கு அதற்கான எந்த அறிகுறியும் தென்படாவிட்டால் வீடுகளிலேயே காற்றோட்டமிக்க அறைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்படும் என்றும் நோயாளிகளும் அவர்களை கவனித்துக்கொள்ளும் குடும்ப உறுப்பினர்களும் Zinc 20 mg, Vitamin c, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நோயாளிகளை கவனித்துக்கொள்வோர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையுடன் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக தொடர்பில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய விட்டமின் மாத்திரைகளை 10 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களை மாவட்ட மருத்துவ கண்காணிப்பு அலுவலர் தலைமையிலான குழு தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அவர்களிடம் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கும் ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கபசுரக்குடிநீரும், நிலவேம்பு குடிநீரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் பருக வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே அறிகுறி இல்லாத கொரோனா பாசிட்டிவ் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வரும் போது, அவர்களுக்கு தொடர்ந்து இருமல் ஏற்பட்டாலோ, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக உணர்ந்தாலோ, தொடர்ந்து தும்மல் ஏற்பட்டோலோ மருத்துவர்களிடம் இது குறித்து தெரியப்படுத்துவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் தனி அறையில் தானே இருக்கிறோம் என நினைக்காமல் மூன்றடுக்கு முககவசம் நோயாளிகள் தொடர்ந்து அணிய வேண்டும் என்றும், எந்தப் பணியிலும் ஈடுபடாமல் முழு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் சமூகப் பரவலாக இல்லை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கேர் டேக்கர் எனப்படும் நோயாளிகளை வீடுகளில் கவனித்துக்கொள்பவர்கள் தூய்மையை அவசியம் பேண வேண்டும் என்றும், கைகளை எப்போதும் அசுத்தம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதற்கான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவமனைகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்தால் மட்டுமே மற்ற பிரிவுகளில் (சிறுநீரக பிரச்சனை, இருதயம், புற்றுநோய், ) உள்ள நோயாளிகளையும் மருத்துவர்களால் எளிதாக கவனித்துகொள்ள முடியும்.
இதனிடையே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் இருந்தும் அறிகுறிகள் இல்லாத கொரோனா பாசிட்டிவ் நபர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதித்து இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரிடமும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.